ஜேர்மன் அருங்காட்சியகத்தில் கைவரிசை காட்டிய 6 பேர் கைது! 113.8 மில்லியன் யூரோ மதிப்புடையவை நககைகள் திருடியதாக குற்றச்சாட்டு
ஜேர்மனியில் உள்ள டிரெஸ்டன் அருங்காட்சியகத்தில் 18-ஆம் நூற்றாண்டின் நகைகளை திருடியதாக 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் ஜேர்மன் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றும் 22 முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆறு பேரும் டிரெஸ்டன் (Dresden) நகரில் உள்ள கிரீன் வால்ட் (Green Vault) அருங்காட்சியகத்தில் இருந்து 4,300 வைரங்களைக் கொண்ட கிட்டத்தட்ட 21 நகைகளை திருடியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட ஆபரணங்கள் கிட்டத்தட்ட 113.8 மில்லியன் யூரோ (135.19 மில்லியன் டொலர்) மதிப்புடையவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்ளை சம்பவம் கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது. ஆனால் இன்னும் அந்த கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் மீட்கப்படவில்லை.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள 6 பேரும் பொலிஸ் விசாரணையில் உள்ளனர். அவர்கள் யாரும் இதுவரை குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருடப்பட்ட நகைகள் "கலை மற்றும் கலாச்சார வரலாற்றின் பார்வையில் மிக முக்கியமானவை" என்று அருங்காட்சியக நிர்வாகம் கூறுகிறது.
கொள்ளைச் சம்பவம் நடந்த அன்று, அருங்காட்சியகத்திற்கு வெளியே தெரு விளக்குகளுக்கான மின் விநியோகத்தை துண்டிக்கபட்டதாகவும், நகைகளை கொள்ளை படித்துக்கொண்டு வெளியேறும்போது, அருங்காட்சியகத்திற்கு அருகிலுள்ள கேரேஜில் ஒரு காரை தீ வைத்து எரித்ததாகவும் கூறப்படுகிறது.