90 நாடுகளை இந்த பட்டியலில் சேர்த்த ஜேர்மனி!
ஜேர்மனி கடந்த 2 வாரங்களில் மொத்தம் 90 நாடுகளை அதன் 'அதிக அப்பத்தான பகுதிகள்' பட்டியலில் சேர்த்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, ஜேர்மனி 90 நாடுகளை அதிக ஆபத்துள்ள பகுதிகளின் பட்டியலில் (High Risk Areas ) சேர்த்துள்ளது, இந்த நாடுகளில் இருந்து வருபவர்களுக்கான பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்குகிறது.
அதிக ஆபத்துள்ள பட்டியலைப் புதுப்பித்து, நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஜேர்மன் மையமான ராபர்ட் கோச் நிறுவனம் (RKI), ஜனவரி 9-ஆம் திகதி 39 உலக நாடுகளை பட்டியலில் சேர்த்தது.
அப்போது பட்டியலில் சேர்க்கப்பட்ட நாடுகளில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, எஸ்டோனியா, ஐஸ்லாந்து, இஸ்ரேல் போன்றவை அடங்கும்.
பின்னர் ஒரு வாரம் கழித்து, ஜனவரி 17 முதல், அல்பேனியா, பல்கேரியா, லாட்வியா, பிலிப்பைன்ஸ், செர்பியா மற்றும் பலவற்றை உள்ளடக்கிய மேலும் 35 நாடுகளையும் பகுதிகளையும் அதிக ஆபத்துள்ள பட்டியலில் RKI சேர்த்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 21), மேலும் 19 நாடுகளை ஜேர்மனி அதன் 'அதிக அப்பத்தான பகுதிகள்' பட்டியலில் சேர்த்தது.
அவை பிரேசில், இந்தியா, பூடான், ருமேனியா, ஜப்பான், அல்ஜீரியா, ஈக்வடார், கொசோவோ, சிலி , கஜகஸ்தான், சவுதி அரேபியா, மாலத்தீவுகள், மால்டோவா, மங்கோலியா, மொராக்கோ, நேபாளம், பராகுவே, துனிசியா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவை அடங்கும்.
இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் இன்று (ஜனவரி 23) முதல் கடுமையான நுழைவுக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்வார்கள்.
RKI-ன் கூற்றுப்படி, அதிக ஆபத்துள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் உட்பட அனைத்து பயணிகளும், நாட்டிற்குள் நுழைவதற்குத் தகுதிபெற, கோவிட்-19க்கு எதிரான முழுமையான தடுப்பூசி, தொற்று பாதிப்பிலிருந்து மீண்ட ஆதாரேம் அல்லது எதிர்மறையான சோதனை முடிவுகள் ஆகியவற்றின் ஆதாரத்தை சமர்ப்பிக்கவேண்டும்.