ஜேர்மனியில் புதிய, கடுமையான நடவடிக்கைகள் தேவை - ஏஞ்சலா மெர்க்கல் ஆலோசனை
ஐரோப்பாவில் கோவிட்-19 நான்காவது அலை தொடங்கியுள்ள நிலையில், நோய்த்தொற்றை கட்டுப்படுத்த ஜேர்மனிக்கு கடுமையான கட்டுப்பாடுகள் தேவைப்படும் என ஏஞ்சலா மேர்க்கல் கூறியுள்ளார்.
உலகில் கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்ட சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஐரோப்பா மீண்டும் COVID-19 தொற்றுநோயின் மையமாக உருவெடுத்திருப்பதால், புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி உத்தரவுகள் பரவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு ஐரோப்பாவில் நேற்று (நவம்பர் 22) மீண்டும் பொது ஊரடங்கு அறிவித்த முதல் நாடானது ஆஸ்திரியா. அந்நாட்டில் அத்தியாவசியமற்ற கடைகள், பார்கள் மற்றும் கஃபேக்கள் மூடப்பட்டன.
இந்நிலையில், தொற்று எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஜேர்மனியில் புதிய கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என வெளியேறும் சான்செலர் ஏஞ்சலா மேர்க்கல் கூறியுள்ளார்.
ஜேர்மன் CDU கட்சியின் தலைவர்களிடம் ஒரு கூட்டத்தில் பேசிய ஏஞ்சலா மேர்க்கல் "நாங்கள் மிகவும் வியத்தகு சூழ்நிலையில் இருக்கிறோம். தற்போது இருக்கும் கட்டுப்பாடுகள் போதுமானதாக இல்லை" என்று கூறியுள்ளார்.
ஜேர்மனியின் தலைநகர் பெர்லின் உட்பட பல பகுதிகளில், கிறிஸ்துமஸ் சந்தைகள் இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
அதே சமயம், அதிக தொற்று எண்ணிக்கை கொண்ட ஆஸ்திரியா மற்றும் செக் குடியரசின் எல்லையில் உள்ள ஜேர்மன் மாநிலங்கள் கடுமையான விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளன. அப்பகுதிகளில் கிறிஸ்துமஸ் சந்தைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
உணவகங்கள் மற்றும் பார்களில் தடுப்பூசி போடாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளன மற்றும் இரவில் ஊரடங்கு உத்தரவுகள் விதிக்கப்பட்டுள்ளன.