புலம்பெயர்ந்தோரை தாக்குவதற்காகவே ஜேர்மனியில் தனி அமைப்பை உருவாக்கிய சிறுவர்கள்: அதிரவைத்துள்ள செய்தி
புலம்பெயர்ந்தோர், புகலிடக்கோரிக்கையாளர்கள் மற்றும் அரசியல் எதிரிகளை தாக்குவதற்காகவே, அமைப்பொன்றை உருவாக்கிய ஐந்து பேர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
அதிர்ச்சியை உருவாக்கியுள்ள விடயம் என்னவென்றால், கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் சிறுவர்கள்!
புலம்பெயர்ந்தோரை தாக்குவதற்காக தனி அமைப்பு
’Last Wave of Defence’ என அழைக்கப்படும் அந்த அமைப்பை உருவாக்கிய அந்த ஐந்து பேரையும், ஜேர்மனியில் பல்வேறு பகுதிகளிலிருந்து நேற்று பொலிசார் கைது செய்தார்கள்.
கைது செய்யப்பட்ட ஐந்துபேரும் அந்த அமைப்பை உருவாக்கும்போது சிறுவர்கள் என தெரியவந்ததால் தான் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஜேர்மன் நீதித்துறை அமைச்சரான Stefanie Hubig தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில், Benjamin H, Ben-Maxim H, Lenny M மற்றும் Jason R ஆகிய நான்குபேரும், உள்நாட்டு தீவிரவாத அமைப்பொன்றின் உறுப்பினர்கள் என சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
ஐந்தாவது நபரான Jerome M என்பவர், அந்த அமைப்புக்கு ஆதரவளித்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் புலம்பெயர்ந்தோர் தங்கியிருந்த கலாச்சார மையம் ஒன்றின் மீது தீவைத்ததால் அவர்கள் மீது கொலை முயற்சி மற்றும் தீவைப்பு ஆகிய குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவர்களில் மற்ற இரண்டு பேர் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான இல்லம் ஒன்றின் ஜன்னலை உடைத்ததுடன், பட்டாசுகள் மூலம் அந்த இல்லத்தில் தீவைக்க முயன்றுள்ளார்கள்.
இரண்டு பேர், மற்றொரு புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான மையத்தில் தீவைத்துள்ளார்கள்.
அத்துடன், தாங்கள் தாக்குதல் நடத்திய வீடுகளின் சுவர்களில், ஜேர்மனி ஜேர்மானியர்களுக்கே, வெளிநாட்டவர்களே வெளியேறுங்கள் என்பது போன்ற சுலோகங்களையும் அவர்கள் எழுதியுள்ளார்கள்.
ஏற்கனவே ஜேர்மன் அரசியல்வாதிகள் பலர் புலம்பெயர்தலுக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், சிறுவர்கள் சிலர் சேர்ந்து புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ள விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |