ஜேர்மனியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சோகம்
ஜேர்மனியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிக்கையில் விபத்து ஏற்பட்டு இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பலர் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டனர்.
கோவிட் தொற்று பரவல் காரணமாக, ஜேர்மனியில் இந்த முறை புத்தாண்டு கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. அதற்காக, பொது மக்களுக்கு பட்டாசுகளை விற்பனை செய்யவும் தடை அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் சிலர், சட்டவிரோதமாக பட்டாசுகளை வாங்கி வெடிக்கச்செய்துள்ளனர். இதனால் பல இடங்களில் விபத்துகள் நேர்ந்துள்ளன.
ஜேர்மனியின் Bonn நகரத்திற்கு அருகே உள்ள Hennef-ல் வெள்ளிக்கிழமை மாலை New Year’s Eve கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிக்கும்போது விபத்து ஏற்பட்டதில் 37 வயது இளைஞர் ஒருவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அதே சம்பவத்தில், மற்றொரு 39 வயது நபர் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும், ஜேர்மனியின் Leipzig மற்றும் Hamburg நகரங்களில் இதேபோல் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடும் வேளையில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஜேர்மனியின் அண்டை நாடான ஆஸ்திரியாவில், வியன்னாவின் தென்மேற்கு பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட பட்டாசு விபத்தில், 23 வயது இளைஞர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் மேலும் 3 பேர் காயமடைந்தனர்.