ஜேர்மனியில் சிறார் ஆபாச வலைத்தளம் முடக்கம்; 3 பேர் கைது... பொலிஸார் அதிரடி
ஜேர்மனியில் இயங்கிவந்த மிகப் பெரிய சிறார் ஆபாச வலைதளத்தை முடக்கி, அதை நிர்வகித்து வந்த மூவரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ஜேர்மனியில் பிராங்பர்ட் நகர பொலிஸாருக்கு 'பாய்ஸ்டவுன்' (Boystown) என்ற சிறார் ஆபாச வலைதளம் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பொலிஸார் தனிக்குழு அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அதில், ஆபாச வலைதளத்தை உருவாக்கி நிர்வகித்து வந்த Paderborn-ஐ சேர்ந்த 40 வயது நபர், Munich நகரைச் சேர்ந்த 49 வயது நபர் மற்றும் வடக்கு ஜேர்மனியைச் சேர்ந்த 58 வயது நபர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆபாச படங்கள், கம்ப்யூட்டர்கள் கைப்பற்றப்பட்டன.
ஹாம்பர்க்கைச் சேர்ந்த 64 வயதான ஒருவர் நான்காவது சந்தேகநபர். அவர் 3,500-க்கும் மேற்பட்ட போஸ்டுகளைப் பதிவேற்றியதாகக் கூறப்படும் இந்த தளத்தில் மிகவும் அதிகமாக பயன்படுத்துபவர்களில் ஒருவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவரையும் விரைவில் பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஜேர்மனி தனியுரிமை விதிகளின்படி பெயர்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை. ஏப்ரல் நடுப்பகுதியில் சோதனைகளுக்குப் பிறகு அந்த ஓன்லைன் தளம் மூடப்பட்டது.
இது குறித்து, ஜேர்மனி பொலிஸார் கூறியதாவது: கடந்த 2019 முதல், சிறார் ஆபாச தளத்தை இந்த கும்பல் நடத்தி வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்கு மூளையாக செயல்பட்ட நபர், பராகுவே நாட்டில் பதுங்கி இருந்தார். அவரை, ஐரோப்பியா பொலிஸார் உதவியுடன் கைது செய்துள்ளோம். அவரை நாடு கடத்த விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வலைதளத்தில், உலகெங்கிலும் 400,000-க்கும் அதிகமானோர் பணம் செலுத்தி, சிறார் ஆபாச படங்களை பார்த்து வந்துள்ளனர். இப்போது அந்த வலைதளத்தை முடக்கியுள்ளோம்" என்று அவர்கள் கூறினர்.