ஜேர்மனியில் சொந்த அக்காவை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த தம்பிகள்: ஒரு அதிர்ச்சியூட்டும் செய்தி
ஜேர்மனியில் தங்கள் சொந்த அக்காவையே கொடூரமாக கொலை செய்துள்ளார்கள், அவரது தம்பிகள். அதற்கு காரணம்?
ஜேர்மனியில் வாழும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 34 வயதான இளம்பெண் ஒருவருக்கு 16 வயதில் திருமணமான நிலையில், கணவரது வன்முறை காரணமாக கணவரைப் பிரிந்த அந்த இளம்பெண், வேறு ஒருவருடன் பழகத் தொடங்கியுள்ளார்.
இந்த விடயம் அவரது தம்பிகளுக்கு பிடிக்காமல் போகவே, அவரைக் கொல்லத் திட்டமிட்ட அவரது தம்பிகளான Sayed H. (26) மற்றும் Seyed H (22) இருவரும், கடந்த ஜூலை மாதம், ஒரு நாள், அவரை சந்திக்க விரும்புவதாகக் கூறி பெர்லினுக்கு வரச்சொல்லியிருக்கிறார்கள். தம்பிகள் சொன்னதை நம்பி அந்த இளம்பெண் அவர்களுடன் செல்ல, அவரைக் கழுத்தை நெறித்தும், தொண்டையை அறுத்தும் கொலை செய்துள்ளார்கள் இருவரும்.
பிறகு அவரது உடலை சூட்கேஸ் ஒன்றில் அடைத்து, டெக்ஸி ஒன்றைப் பிடித்து ரயில் நிலையம் சென்று, அங்கிருந்து பவேரியாவுக்கு ரயிலில் சென்று, மூத்த தம்பியின் வீட்டின் அருகில் ஓரிடத்தில் அக்காவின் உடலைப் புதைத்துள்ளார்கள் அவர்கள்.
இந்த கொலை தொடர்பாக, கடந்த ஆகத்து மாதம் 3ஆம் திகதி அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுக் காவலில் அடைக்கப்பட்டார்கள். விசாரணையின்போது, தங்கள் அக்காவின் மேற்கத்திய நாகரீக வாழ்வுக்காக அவரைத் தண்டிப்பதற்காகவே அவரைக் கொலை செய்ததாகவும், தங்கள் பார்வையில் அவர் ஒரு பெண் என்ற வகையில், பழமை வாய்ந்த கௌரவத்துக்கும் ஒழுக்கத்துக்கும் ஏற்ற வாழ்க்கையை அவர் வாழவில்லை என்றும் தெரிவித்தார்கள்.
ஜேர்மனியில் நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், சகோதரர்கள் இருவர் மீதும் கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.