பெருவெள்ளத்தில் பலியானவர்களை அடையாளம் காண திணறும் ஜேர்மனி: வெளியான காரணம்
ஜேர்மனியில் பெருவெள்ளப் பேரழிவில் சிக்கி பலியானவர்களில் பெரும்பாலானவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் இருப்பதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
ஜேர்மனியின் Rhineland-Palatinate மற்றும் North Rhine-Westphalia ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத கனமழை பெருவெள்ளத்தில் சிக்கி 179 பேர்கள் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இத்தனை பேர்களையும் அடையாளம் காண்பதில் ஜேர்மன் நிர்வாகம் திணறி வருகிறது. Rhineland-Palatinate பகுதியில் மட்டும் மரணமடைந்துள்ள 132 பேர்களில் 64 பேர்களை அடையாளம் காண முடியாமல் உள்ளதாக உள்விவகாரத் துறை அமைச்சர் Roger Lewentz சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுவாக இக்கட்டான சூழலில் டி.என்.ஏ சோதனை அல்லது பற்களின் அமைப்பு உள்ளிட்ட காரணிகளால் சடலங்களை அடையாளம் காணப்படுவதுண்டு.
ஆனால் ஜேர்மனியில் குடியிருக்காதவர்களின் டி.என்.ஏ சோதனையை முன்னெடுப்பது என்பது மிகவும் சிக்கலான விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒருவழியாக அடையாளம் காணப்பட்டு, சடலங்களை இறுதிச்சடங்குகளுக்காக அனுமதித்தால், அதிலும் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.
பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த இரு மாநிலங்களிலும் உள்ள பெரும்பாலான பகுதிகளில் தற்போது பிணத்தை ஏற்றிச் செல்லும் வண்டிகள் இல்லை என்றே தெரிய வந்துள்ளது.
மேலும், அடையாளம் காண்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் சில பகுதிகளில், உடல்களை புதைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்றே கூறப்படுகிறது.