நீரஜ் சோப்ராவின் ஒலிம்பிக் வெற்றியை கொண்டாடிய ஜேர்மனி! என்ன காரணம் தெரியுமா?
ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதற்காக 130 கோடி இந்தியர்களும் பெருமிதம்கொள்ளும் அதே நேரத்தில், இந்த வெற்றியை 130 மக்கள் மட்டுமே வசிக்கும் ஜேர்மானிய கிராமமும் கொண்டாடுகிறது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறிதல் விளையாட்டில் இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்தார் நீரஜ் சோப்ரா. அவரின் சாதனைக்கு இந்தியா முழுவதும் பெருமைப்படுகிறது.
ஆனால் ஜேர்மனியில் உள்ள வெறும் 130 மக்கள் மட்டுமே வாழும் குக்கிராமம் ஒன்றும் நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறது.
ஆம் உண்மை தான். ஜேர்மனியில் உள்ள ஒபெர்ஷ்லெட்டன்பாக் (Oberschlettenbach) என்ற சிறிய கிராமமும் நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கொண்டாட்டத்தில் இணைந்தது.
ஏனென்றால், இந்த மாபெரும் வெற்றியின் பின்னணியில் இருப்பவர் இந்த கிராமத்தை சேர்ந்த டாக்டர் கிளாஸ் பார்டோனீட்ஸ் (Dr Klaus Bartonietz) தான்.
73 வயதான பயிற்சியாளர் பார்டோனீட்ஸ், பயோமெக்கானிக்கல் நிபுணர். நீரஜ் சோப்ராவுக்கு பயிற்சியாளராக இருந்த பார்டோனியெட்சுக்கும் நீரஜ் சோப்ராவின், வெற்றியில் முக்கியமான பங்களிப்பு இருக்கிறது.
ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு தனது வீட்டிற்கு திரும்பிய பார்டோனியெட்ஸுக்கு மக்களின் வாழ்த்து அழைப்புகள் மற்றும் செய்திகள் வந்து குவிந்தன. அதிலும் நீரஜ் சோப்ரா வரலாற்று சாதனை ஏற்படுத்திய அந்த இறுதி கணத்தில், தனது ஈட்டி எங்கு சென்று விழுந்தது என்று தெரியாத நிலையிலும், வெற்றிகான சைகை காட்டியது அனைவருக்கும் பிடித்திருந்ததாக பார்டோனியெட்ஸின் அண்டை வீட்டினர் சொன்னார்களாம்.
ஜேர்மன் பயிற்சியாளர் டாக்டர் கிளாஸ் பார்டோனீட்ஸ் இப்போது அவரது கிராமத்தில் மிகவும் பிரபலமாகிவிட்டார். நீரஜ் சோப்ராவின் ஒலிம்பிக் வெற்றிக்குப் பிறகு தனக்கு இப்போது வரும் அழைப்புகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துவிட்டதாக பார்டோனீட்ஸ் கூறுகிறார்.
நீரஜ் சோப்ராவைப் பற்றி தெரிந்துக் கொள்வதற்காக மக்கள் அவரை அழைக்கிறார்கள் என்று தனது மாணவரைப் பற்றி பெருமையுடன் கூறுகிறார் பயிற்சியாளர். அதுமட்டுமல்ல, தற்போது நிறைய விளையாட்டு வீரர்களும், பிற பயிற்சியாளர்களும் தன்னை அழைப்பதாக கூறும் அவர், ஒரே இரவில் விஷயங்கள் எவ்வாறு மாறுகின்றன என்பதை உணர்ந்தால் வேடிக்கையாக இருக்கிறது என்று பார்டோனீட்ஸ் கூறுகிறார்.
அதேபோல், இந்தியாவின் ஈட்டி எறிதல் விளையாட்டின் தலைமை பயிற்சியாளர் Uwe Hohn ஜேர்மனியை சேர்ந்தவர். அவரது சொந்த ஊரான ரெயின்ஸ்பெர்க்கில் அவருக்கும் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்தது. நீரஜ் சோப்ராவின் ஒலிம்பிக்கின் செயல்திறன் பற்றி பலரும் தன்னிடம் நீண்ட நேரம் பேசுவதாக அவர் கூறினார்.
இந்தத் தலைமுறையின் தலைசிறந்த ஈட்டி எறிபவரான ஹான், நீரஜ் சோப்ராவுக்கு ஆரம்ப நாட்களிலிருந்தே பயிற்சி அளித்து வருகிறார். இவரது பயிற்சியை பெற்ற நீரஜ் சோப்ரா, ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் கோப்பைகளை வென்றார்.
100 மீட்டருக்கு மேல் எறிந்த உலகின் ஒரே ஈட்டி எறியும் வீரர் உவே ஹான் என்பது குறிப்பிடத்தக்கது.