நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் உக்ரைனியர் ஒருவரை ஜேர்மனி கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
உக்ரைனியர் மீது வழக்குப்பதிவு
உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கிய பிறகு, கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பால்டிக் கடலுக்கடியில் நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாயை தகர்க்கும் நோக்கில் 7 பேர் கொண்ட குழுவை வழிநடத்திய குற்றச்சாட்டின் கீழ் உக்ரைன் நேர்ந்த நபர் ஒருவர் மீது ஜேர்மனியின் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக குற்ற வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த தகவலை ARD மற்றும் Zeit ஆகிய முன்னணி ஜேர்மனிய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஊடகங்கள் வழங்கிய தகவலின் படி, கைது செய்யப்பட்ட நபர் 50 வயது செர்ஹி.கே என அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இவர் கீவ் நகரைச் சேர்ந்த உக்ரைனிய ராணுவ வீரர் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர் கடந்த 2025ம் ஆண்டு இத்தாலியில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில், அதன் பிறகு விசாரணைக்காக ஜேர்மனிக்கு நாடு கடத்தப்பட்டார்.
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் என்பது ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவிற்கு எரிவாயு கொண்டு செல்லும் முக்கிய கடலடி வழித்தடம் ஆகும்.
மொத்தமுள்ள 4 குழாய்களில் 3 குழாய்கள் அப்போது அழிக்கப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் அந்த குழாய்கள் பயன்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவை எரிவாயு விநியோகத்தில் முக்கியமான உள்கட்டமைப்பாக கருதப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக தனக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என்று செர்ஹி.கே மறுத்து வருகிறார். மேலும் தனக்கு எதிராக முன் வைக்கப்படும் ஆதாரங்கள் நிலைக்காது என்றும், இந்த வழக்கில் இருந்து நிச்சயம் செர்ஹி.கே விடுவிக்கப்படுவார் என்றும் அவரது வழக்கறிஞர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |