ஜேர்மனியில் Omicron பாதிப்புகள் உறுதி! மாகாண நிர்வாகம் துரித நடவடிக்கை
ஜேர்மனியில் புதிய வகை கொரோனா வைரஸால் 2 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
போட்ஸாவானாவில் முதன்முதலில் கண்டறியறியப்பட்டு, தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் தீவிரமாக பரவிவரும் புதிய வகை Covid-19 வைரஸான Omicron, தற்போது பல உலக நாடுகளில் பரவ தொடங்கிவிட்டது.
இப்போது, முதல் முறையாக ஜேர்மனியில் தென் மாநிலமான பவேரியாவில் ஓமிக்ரான் வைரஸால் இரண்டு பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளன என்று அம்மாநில சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட இரண்டு நபர்கள் நவம்பர் 24 அன்று முனிச் விமான நிலையத்தில் ஜேர்மனிக்குள் நுழைந்ததாக பவேரிய சுகாதார அமைச்சர் கிளாஸ் ஹோலெட்செக் (Klaus Holetschek) கூறினார்.
இந்த இருவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் (ECDC), இந்த புதிய வகை வைரஸ், தற்போது கிடைக்கக்கூடிய தடுப்பூசிகளின் செயல்திறனைக் குறைக்கும், மேலும் மீண்டும் நோய்த்தொற்றின் அபாயத்தையும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.
முன்னதாக சனிக்கிழமையன்று, ஜேர்மனியின் Hesse மாநிலத்தின் சமூக விவகாரங்கள் மற்றும் ஒருங்கிணைப்புக்கான மாநில அமைச்சர், கை க்ளோஸ் (Kai Klose), இந்த மாறுபாடு ஜேர்மனியில் "ஏற்கனவே வந்திருக்க வாய்ப்புள்ளது" என்று கூறியிருந்தார்.
தெற்கு ஆபிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ் மாறுபாடான ஓமிக்ரானின் (Omicron) பரவலைத் தடுக்க உலக நாடுகள் அனைத்தயும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
பல நாடுகள் தென்னாப்பிரிக்கா மற்றும் பிற தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ளன. அதேநேரம், இஸ்ரேல் அனைத்து வெளிநாட்டவருக்கும் நாட்டிற்குள் நுழைய தடை விதித்துள்ளது.