பிரித்தானியாவை 'வைரஸ் மாறுபாடு பகுதி' என வகைப்படுத்த ஜேர்மனி திட்டம்! அறிவித்தால் என்ன நடக்கும்?
பிரித்தானியாவை வைரஸ் மாறுபாடு பகுதி என வகைப்படுத்த வேண்டுமா என்று ஜேர்மனி அரசாங்கம் பரிசீலித்து வருவதாக சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இன்று பிற்பகலில் அரசாங்கம் இதுகுறித்து முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.
ஜேர்மன் கொரோனா விதிகளின் கீழ், 'வைரஸ் மாறுபாடு பகுதிகளில்' இருந்து நாடு திரும்பும் பயணிகள் தடுப்பூசி போட்டாலும், இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
தீவிரமாக பரவும் ஒமிக்ரான் மாறுபாட்டின் காரணமாக பிரத்தானியாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் பிரித்தானியாவில் 88,376 பேருக்கு கொரோானா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது.
இதனிடையே, வரும் சனிக்கிழமை முதல், பிரித்தானியாவிலிருந்து வரும் அனைத்துப் பயணிகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.