கடுமையாக்கப்படும் கோவிட் கட்டுப்பாடுகள்., ஜேர்மனிக்கு இப்போது யார் செல்ல முடியும்?
ஜேர்மனியில் மீண்டும் கோவிட் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் நிலையில், ஜேர்மனிக்கு யார் எல்லா செல்ல அனுமதிக்கப்படுவர் என்பது குறித்து இந்த தொகுப்பில் கேள்வி பதிலாக கொடுக்கப்பட்டுள்ளன.
நான்காவது கொரோனா வைரஸ் அலை தற்போது ஜேர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் தொற்று எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. சில இடங்களில், நிலைமை மிகவும் வியக்கத்தக்க நிலையில் உள்ளது, பொது நிகழ்வுகள் மற்றும் கண்காட்சிகள் ரத்து செய்யப்பட்டு, தொடர்பு கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஜேர்மனியின் சில பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தடுப்பூசி போடப்பட்ட சுற்றுலாப் பயணிகள் இன்னும் நுழையலாம் என்றாலும், ஜேர்மனிக்கு வருவதற்கு எதிராக அமெரிக்கா மீண்டும் ஒரு எச்சரிக்கையை கடந்த செவ்வாயன்று வெளியிட்டது.
இந்த நிலையில், ஜேர்மனிக்குள் யார் நுழையலாம்? அவர்களுக்கு என்ன தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் பொருந்தும்? ஜேர்மன் விடுமுறைக்கு வருபவர்கள் வீடு திரும்பும்போது என்ன நினைவில் கொள்ள வேண்டும்? போன்ற சில மிக முக்கியமான சில கேள்விகளுக்கான பதில்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
யார் ஜேர்மனிக்குள் நுழைய முடியும்?
12 வயதிலிருந்து வரும் அனைவரும், அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் மற்றும் எந்தப் போக்குவரத்து மூலம் வருகிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், தடுப்பூசி போடப்பட்ட, பாதிப்பிலிருந்து மீண்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட எதிர்மறையான கோவிட்-19 சோதனைக்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் தேவை ஜனவரி 15, 2022 வரை அமுலில் இருக்கும்.
அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்தும், ஷெங்கன் தொடர்புடைய மாநிலங்களான ஐஸ்லாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டைன் ஆகியவற்றிலிருந்தும் நுழைய முடியும்.
ஜேர்மனிக்குச் செல்வதற்கு முன், சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் விதிகளின் மேலோட்டத்தைப் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். சுகாதார அமைச்சகம் , உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவு அலுவலக வலைத்தளங்களில் விரிவான தகவல்களை பயணிகள் அறிந்துகொள்ள முடியும்.
மூன்றாம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜேர்மனிக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்களா?
மூன்றாம் நாடுகளில் இருந்து பயணிகள் சில நிபந்தனைகளின் கீழ் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
அவுஸ்திரேலியா மற்றும் கனடாவை உள்ளடக்கிய "பாதுகாப்பான" மூன்றாம் நாடுகளின் பட்டியலிலிருந்து வசிப்பவர்கள், மேற்குறிப்பிட்ட ஆவணத் தேவைக்கு உட்பட்டு எந்த நோக்கத்திற்காகவும் ஜேர்மனிக்குள் நுழையலாம்.
அமெரிக்கா உட்பட மற்ற மூன்றாம் நாடுகளில் இருந்து வரும் பயணிகள், முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும் அல்லது அவர்களின் பயணத்திற்கான அழுத்தமான காரணங்களை முன்வைக்க வேண்டும்.
ஜிம்பாப்வே, நமீபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளை "வைரஸ் மாறுபாடு பகுதிகள்" என்று ஜேர்மனி அறிவித்தது. ஜேர்மன் நாட்டினரையும் நிரந்தர குடியிருப்பாளர்களையும் இந்த நாடுகளில் இருந்து கொண்டுவர மட்டுமே விமான நிறுவனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அவர்களும் வந்த பிறகு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
யாரை தனிமைப்படுத்த வேண்டும்?
தடுப்பூசி போடப்பட்ட, பாதிப்பிலிருந்து மீண்ட அல்லது எதிர்மறையான COVID-19 சோதனைக்கான ஆதாரத்தை சமர்ப்பிக்கத் தவறிய அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல், அதிக ஆபத்துள்ள மற்றும் வைரஸ் மாறுபாடுள்ள நாடுகளில் இருந்து வருபவர்கள் ஜேர்மனியில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
அதிக ஆபத்துள்ள நாடுகளில் (high-risk countries) இருந்து வரும் பயணிகள் 10 நாட்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், அதேசமயம் வைரஸ் மாறுபாடுள்ள நாடுகளில் இருந்து வருபவர்கள் இரண்டு வாரங்கள் சுயமாகத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதிக ஆபத்துள்ள நாடுகளைச் சேர்ந்த நபர்கள் ஐந்தாவது நாளில் எதிர்மறையான சோதனை முடிவை வழங்க முடிந்தால் சுய-தனிமைப்படுத்தலை நிறுத்தலாம். வைரஸ் மாறுபாடுகள் உள்ள இடங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்த வாய்ப்பு இல்லை.
நான் ஒரு ஜேர்மன் சுற்றுலாப் பயணி மற்றும் விடுமுறையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டேன். நான் ஜேர்மனிக்குத் திரும்பலாமா?
COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட எவரும், பிறருக்கு தொற்று ஏற்படக்கூடும் என்பதால், வீடு திரும்புவதற்குப் பதிலாக வெளிநாட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொள்கிறது.
இருப்பினும் நீங்கள், ஜேர்மனிக்குள் நுழைவதற்கு அதிகாரிகள் மறுக்கக்கூடாது. நீங்கள் திரும்பிச் சென்றால் சுயமாகத் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும்.
நான் என் குழந்தைகளுடன் ஜேர்மனிக்கு செல்ல விரும்புகிறேன். எந்த விதிகள் பொருந்தும்?
மேலே உள்ள விதிகள் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பொருந்தும். இந்த வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதா, குணமடைந்துவிட்டனரா அல்லது எதிர்மறையாக சோதனை செய்தவரா என நிரூபிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும், அதிக ஆபத்துள்ள நாட்டிலிருந்து திரும்பும் போது அவர்கள் 5 நாட்களுக்கு மட்டுமே தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
சுற்றுலாப் பயணிகள் தாங்கள் பார்வையிட விரும்பும் ஜேர்மனியின் சில பகுதிகளில் பொருந்தக்கூடிய சமீபத்திய விதிகளை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நான் ஜேர்மனியில் தங்கியிருக்கும் போது எனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?
முடிந்தவரை விரைவாக தனிமைப்படுத்தலுக்குச் சென்று, சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிக்குத் தெரிவிக்கவும். எந்த நிறுவனத்தைத் தொடர்புகொள்ள வேண்டும் என்பதை அறிய, இந்த இணையதளத்தைப் பார்க்கவும். உங்களுக்கு கடுமையான கோவிட்-19 அறிகுறிகள் இருந்தால், மருத்துவரை அழைக்கவும் அல்லது பின்வரும் எண்ணை அழைக்கவும்: 116 117. அவசரநிலையில், 112 ஐ அழைக்கவும் அல்லது உங்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்லவும்.