கொரோனா சான்றிதழ் மோசடியால் உயிரிழந்த ஜேர்மானிய குடும்பம் குறித்து ஒரு துயர தகவல்
ஜேர்மன் நகரம் ஒன்றிலுள்ள வீடு ஒன்றிற்கு அழைக்கப்பட்ட பொலிசார், அங்கு வரிசையாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்து கிடந்த காட்சியால் திணறிப்போனார்கள்.
தலைநகர் பெர்லினுக்கு அருகே உள்ள, Koenigs Wusterhausen என்ற நகரிலுள்ள அந்த வீட்டில் உயிரிழந்து கிடந்தவர்கள், Devid R (40), அவரது மனைவி Linda (40), தம்பதியரின் மகள்களான Leni (10), Janni (8) மற்றும் Rubi (3) என தெரியவந்தது.
அந்த வீட்டை சோதனையிட்டபோது, அங்கு Devid கைப்பட எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் சிக்கியது. அதில், தனது மனைவி வேலை செய்யும் இடத்தில், அவருக்காக தான் போலி கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தயார் செய்து கொடுத்ததாகவும், அதை அலுவலர்கள் கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க இருப்பதாக அச்சுறுத்தியதாகவும், அதனால்தான் தாங்கள் இந்த முடிவை எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் அவர்.
Devid ஆசிரியராக பணி செய்துவந்தார். அவரது மனைவி பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றி வந்திருக்கிறார்.
சமீபத்தில், போலி கொரோனா சான்றிதழ் கொடுத்து ஏமாற்றுவோருக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படும் என ஜேர்மனியில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆகவே, தாங்கள் போலி சான்றிதழ் கொடுத்தது தெரியவந்ததையடுத்து, பல்கலைக்கழக ஊழியர்களும் அச்சுறுத்தவே, ஒன்றில் தான் அல்லது தன் மனைவி சிறைக்குச் செல்லலாம், அதனால் அரசு தங்கள் பிள்ளைகளை தங்களிடமிருந்து பிரித்துவிடலாம் என அஞ்சி Devid இந்த முடிவை எடுத்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.
ஆனால், இந்த வழக்கில் அப்படி எதுவும் நடக்க வாய்ப்பில்லை என சட்டத்தரணிகள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். மிஞ்சிப்போனால், அபராதமோ அல்லது Devid பணி செய்யும் இடத்தில் துறை சார் நடவடிக்கையோ எடுக்கப்பட்டிருக்கலாம்.
அந்த குடும்பத்தில் இதுவரை எந்த சண்டை முதலான பிரச்சினைகளும் இல்லாத நிலையில், குழந்தைகளையும் அரசு அவர்களிடமிருந்து பிரித்திருக்காது என்கிறார்கள் சட்டத்தரணிகள்.
ஆனால், அப்படியெல்லாம் நடந்துவிடுமோ என அஞ்சி Devid இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
பிள்ளைகள் தத்தம் அறைகளில் இறந்து கிடந்த நிலையில், Devid பிள்ளைகளை அவரவர் படுக்கை அறையில் வைத்தே சுட்டுக்கொன்றுவிட்டு, தன் மனைவியையும் சுட்டுவிட்டு தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.