பிரித்தானியா மீதான கட்டுப்பாடுகளுக்கு தளர்வு! ஜேர்மனி முக்கிய அறிவிப்பு
பிரித்தானியாவில் இருந்து ஜேர்மனிக்கு பயணிக்கும் மக்கள் மீதான கட்டுப்பாடுகள் இந்த வாரம் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அல்லது ஆன்டிபாடிகளைக் கொண்ட பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் புதன்கிழமை முதல் தனிமைப்படுத்தப்படாமல் ஜேர்மனிக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த இரண்டு வகைகளிலும் சேராத சுற்றுலாப் பயணிகள் தனிமைப்படுத்தப்படுவார்கள். ஆனால், 5 நாட்களுக்குப் பிறகு PCR சோதனையில் கோவிட் நெகட்டிவ் என முடிவு வந்தால், கட்டாய 10 நாள் தனிமைப்படுத்தலைக் குறைக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
ஜேர்மனி தற்போது பிரித்தானியாவின் மஞ்சள் பட்டியலில் (Amber List) உள்ளது. அதாவது, ஜேர்மனியில் இருந்து பிரித்தானியாவுக்கு வரும் மக்கள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும்.
அதேபோல், 5 நாட்களுக்குப் பிறகு PCR சோதனையில் கோவிட் நெகட்டிவ் என முடிவு வந்தால், தொடர்ந்து தனிமைப்படுத்த வேண்டியது இல்லை.
ஏஞ்சலா மேர்க்கெல், 'அதிக ஆபத்து கொண்ட வைரஸ் மாறுபாடு உள்ள பகுதிகள்' என்ற பட்டியலில் இருந்த பிரித்தானியா, இந்தியா, போர்ச்சுகல், ரஷ்யா மற்றும் நேபாளம் ஆகிய 5 நாடுகளை, இப்போது 'அதிக பாதிப்புக்குள்ளான பகுதிகள்' என்ற வகைக்குள் கொண்டுவந்தார்.
கடந்த வாரம் ஏஞ்சலா மெர்கல் மற்றும் போரிஸ் ஜான்சன் இருவரும் நேரில் சந்தித்து பேசியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரித்தானியாவில் இருந்து ஜேர்மனிக்கு பயணிக்கும் மக்கள் மீதான கட்டுப்பாடுகள் புதன்கிழமை முதல் (ஜூலை 7) தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.