கோவிட்-19 மீட்புச் சான்றிதழ் செல்லுபடி காலத்தை குறைக்க ஜேர்மனி வலியுறுத்தல்!
கொரோனாவிலிருந்து குணமடைந்ததற்கான மீட்புச் சான்றிதழ்களின் செல்லுபடியை 90 நாட்களாகக் குறைக்க ஐரோப்பிய ஒன்றியத்தை ஜேர்மனி வலியுறுத்துகிறது.
சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையின் கீழ், கோவிட்-19 மீட்பு சான்றிதழ் செல்லுபடியாகும் காலம் 270 நாட்களிலிருந்து 180 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தற்போது அந்த 180 நாட்கள் (6 மாதங்கள்) எனும் செல்லுபடி காலத்தை பாதியாக குறைத்து 90 நாட்களாக (3 மாதங்கள்) ஐரோப்பிய ஒன்றியம் அறிவிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
"ஏற்கனவே டெல்டா வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, மூன்று மாதங்களுக்குப் பிறகு, Omicron வகை கொரோனா வைரஸால் மீண்டும் தொற்று ஏற்படலாம். ஜேர்மனியில் எங்களால் மாற்ற முடிந்ததை நாங்கள் ஐரோப்பாவிலும் மாற்ற முயற்சிக்கிறோம்” என்று ஜேர்மன் சுகாதார அமைச்சர் Karl Lauterbach சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறினார்.
தடுப்பூசி போடுவது அல்லது ஏற்கெனவே நோய்த்தொற்றுக்கு உள்ளாவது மூலம் பெறப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் திறனுடன் Omicron வைரஸ் அதிக அளவில் பரவிவருவதாகே ஆய்வுகள் தொடர்புபடுத்துகின்றன.
இந்த மாறுபாடு COVID-19 வைரஸின் ஆதிக்க விகாரமாக மாறியுள்ளது, இது 2020 முதல் ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான ஜேர்மனியர்களை பாதித்துள்ளது.
மேலும் குறிப்பாக, உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி ஜேர்மனியில் கடந்த வாரம் 848,945 பாதிப்புகள் மற்றும் 1,045 இறப்புகள் பதிவாகியுள்ளன.
மறுபுறம், மேலும் பரவலை எதிர்த்துப் போராடும் முயற்சியில், ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், குடிமக்கள் தடுப்பூசி போடுமாறு வலியுறுத்தியுள்ளன.
இதுவரை, ஜேர்மனியில் 73.4 சதவீத மக்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்.