மில்லியன் கணக்கான மக்கள்... ரஷ்யாவால் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட ஜேர்மனி
ஜேர்மனியில் எதிர்வரும் குளிர் காலத்தில் மில்லியன் கணக்கான மக்கள் குளிர் போக்க முடியாமல் அவஸ்தைக்கு உள்ளாகும் அபாய நிலை ஏற்படும் என அதிகாரிகள் தரப்பு அச்சம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பின் பின்னர் ஐரோப்பிய நாடுகளை விளாடிமிர் புடின் பழிவாங்கி வருகிறார். ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவளிப்பதாலும், ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளதாலும் கடும் கோபத்தில் இருக்கும் விளாடிமிர் புடின் ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கான எரிசக்தி வழங்கலை துண்டித்துள்ளார்.
இதனால் தற்போது ஜேர்மனியின் எரிசக்தி உள்கட்டமைப்பானது மொத்தமாக ஸ்தம்பித்துப் போயுள்ளது. தற்போது பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் குளிர் காலத்தை எவ்வாறு சமாளிப்பது என்ற கேள்வியில் உறைந்து போயுள்ளது.
மட்டுமின்றி, எரிவாயு குழாய்களில் குறைந்த அழுத்தம் ஏற்பட்டுள்ளதும் ஜேர்மன் அதிகாரிகளை கவலை கொள்ள வைத்துள்ளது. உக்ரைன் மீதான போருக்கு முன்னர் ஐரோப்பிய நாடுகளின் மொத்த எரிவாயு தேவையில் 40% அளவுக்கு ரஷ்யா பூர்த்தி செய்து வந்தது.
இதனிடையே, உக்ரைன் போருக்கு பின்னர், ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட, இனிமேல் ரூபில் நாணயத்தில் மட்டுமே வர்த்தகம் என அறிவித்தது ரஷ்யா. அதுவரை யூரோவில் ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ஐரோப்பிய நாடுகள் இதற்கு ஒப்புக்கொள்ள மறுத்தது.
இதனால் போலந்து, பல்கேரியா, பின்லாந்து, டென்மார்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் எரிவாயு வழங்கலை ரஷ்யா துண்டித்தது.
மட்டுமின்றி, ஜேர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளின் எரிவாயு விநியோகத்தில் பெருமளவு குறைத்துள்ளது.
ஜேர்மனிக்கு மட்டும் 40% அளவுக்கு எரிவாயு வழங்கலை குறைத்துள்ளது ரஷ்யா.