ஜேர்மன் பாலத்தில் தரையிறங்கிய பிரெஞ்சு விமானத்தால் விபத்து!
ஜேர்மனியில் ஆட்டோபான் பாலத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தின் மீது டிரக் மோதி விபத்துக்கு உள்ளானது.
கார்கள் பயன்படுத்தும் ஆட்டோபான் பாலத்தில் அவசரமாக தரையிறங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், ஒரு விமானி தனது இலகுரக விமானத்தை ஒரு டிரக் மீது மோதிவிட்டார் என ஜேர்மன் பொலிஸார் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தினர்.
72 வயதான விமானி, பிரான்சில் இருந்து நெதர்லாந்திற்கு, ஜேர்மனியின் ரைன்லேண்ட்-பாலாட்டினேட் மாநிலத்தின் மீது பறந்து கொண்டிருந்தார்.
அப்போது அவரது விமானத்தின் எஞ்சின் செயலிழக்கத் தொடங்கியதால், விமானத்தை விரைவாக எங்காவது தரையிறக்க வேண்டியிருந்தது.
இந்த நிலையில், மேற்கு ஜேர்மனியில், பிரான்சின் எல்லையில் உள்ள Pirmasens நகருக்கு அருகில் உள்ள Schwarzbachtalbrücke எனும் 100 மீட்டர் (328 அடி) உயரமான பாலத்தில் தரையிறங்கினார்.
அப்போது அவரது விமானம், பாலத்தில் எதிரே வந்த டிரக் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. ஆனால், விமானி லேசான காயங்களுடன் வெளியேறினார், மேலும், டிரக் டிரைவர் காயமின்றி தப்பினார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஏராளமான அவசர சேவை பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
விபத்தின் காரணமாக பாலத்தில் கொண்டிக்கிடந்த எரிபொருளையும், விமானத்தையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி சரிசெய்ய முழு சாலையையும் முழுமையாக மூட வேண்டியிருந்தது.
பின்னர், மாலைக்குள் பாதைகள் பொது போக்குவரத்துக்கு திறக்கப்பட்டதாக உள்ளூர் செய்தித்தாள் Die Rheinpfalz தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் சுமார் 60,000 யூரோகள் மதிப்புடைய பொருட்சேதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.