ஜேர்மனியில் அஸ்ட்ராஜெனேகாவின் முதல் டோஸ் பெற்ற 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பு!
ஜேர்மனியில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்ட 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸாக வேறு தடுப்பூசி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா கொரோனா வைரஸ் தடுப்பூசியால் அரிதான இரத்த உறைதல் பிரச்சினைகள் ஏற்படுவதன் காரணமாக, அந்த தடுப்பு மருந்தை 60 வயதுக்கு உட்பட்ட யாருக்கும் இனி வழங்கப்போவதில்லை என்று மார்ச் 30-ம் திகதி அறிவிக்கப்பட்டது.
அதற்கு முன்புவரை அந்த தடுப்பூசியை முதல் டோஸாக பெற்றவர்களிடையே இந்த அறிவிப்பு பயத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. மேலும் அவர்களுக்கான இரண்டாவது டோஸ் குறித்து எந்த அறிவிப்பும் கிடைக்காத நிலையில் மக்களிடையே பதற்றம் நிலவியது.
இந்நிலையில், ஜேர்மனி அரசு இது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, அஸ்ட்ராஜெனேகாவை முதல் டோஸாக பெற்ற 60 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் இரண்டாவது டோஸாக வேறு தடுப்பூசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மில்லியன் கணக்கான மக்களின் உயிருடன் தொடர்புடைய இந்த முடிவுக்கு மத்திய மற்றும் பிராந்திய சுகாதார அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளனர்.
இரண்டாவது டோஸாக பயோஎன்டெக்-ஃபைசர் அல்லது மாடர்னா தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.
அஸ்ட்ராஜெனேகா டோஸ் பெற்று 12 வாரங்களுக்குப் பிறகு இந்த வேறுபட்ட இரண்டாவது ஊசி கொடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, 60 வயதிற்குட்பட்ட 2.2 மில்லியன் மக்கள் சமீபத்திய வாரங்களில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியம், ஐஸ்லாந்து, நோர்வே, லிச்சென்ஸ்டீன் மற்றும் பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட 34 மில்லியன் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளில் 222 பேருக்கு இந்த அரிய இரத்த உறைதல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்று EMA தெரிவித்துள்ளது. மேலும், மார்ச் 22 நிலவரப்படி அதில் 18 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.