போரை நிறுத்த சீனாவுக்கு மறைமுக அழுத்தம் கொடுத்த ஜேர்மனி
ஜேர்மன் சேன்ஸலர் சீனாவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், உக்ரைன் போரை நிறுத்த அழுத்தம் கொடுக்குமாறு மறைமுகமாக கேட்டுக்கொண்டார்.
உக்ரைன் போரை நிறுத்த அழுத்தம் கொடுக்குமாறு கோரிக்கை
ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் சீனாவுக்கு அரசு முறைப்பயணமாக சென்றுள்ளார். பீஜிங்கில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்த அவர், உக்ரைனை ரஷ்யா ஊடுருவியுள்ள விடயம் உலக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறியுள்ளார். அதாவது, போரை நிறுத்துமாறு தனது நட்பு நாடான ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அவர் சீன ஜனாதிபதியை மறைமுகமாக கேட்டுக்கொண்டுள்ளார்.
Fang Zhe/Xinhua via AP
உக்ரைனை ஊடுருவியுள்ள புடின், தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலையில் அணு ஆயுதங்களை பயன்படுத்தவும் தாங்கள் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், அணு ஆயுதங்களை பயன்படுத்துவது மட்டும் அல்ல, அவ்வாறு பயன்படுத்துவதாக அச்சுறுத்தவும் கூடாது என்னும் விடயத்தை ஜி ஜின்பிங்கிடம் பதிவுசெய்தார் ஷோல்ஸ்.
உக்ரைன் போரால் ஜேர்மனியின் முக்கிய விடயங்களான ஆற்றல், உலகின் உணவுத்தேவை மற்றும் பிற வர்த்தகங்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் ஷோல்ஸ் ஜி ஜின்பிங்கிடம் தெரிவித்தார்.
Fang Zhe/Xinhua via AP
பதிலுக்கு, உக்ரைன் ரஷ்யா விடயத்தில் அமைதியை ஏற்படுத்துவதில் ஜேர்மனி உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைக்க சீனா தயாராக இருப்பதாக ஜி ஜின்பிங் கூறியதாக சீன ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |