ரஷ்ய தூதரக அலுவலர் ஜேர்மனியை விட்டு வெளியேற்றம்
ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் ஜேர்மன் உக்ரைன் குடிமகள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த விடயத்துடன் தொடர்புடைய ரஷ்ய தூதரக அலுவலர் ஒருவர் ஜேர்மனியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.
உளவு பார்த்ததாக ஜேர்மன் பெண் கைது
ஜேர்மன் உக்ரைன் குடிமகளான IIona W. என்னும் பெண், ரஷ்யாவுக்காக உளவுபார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

உயர்மட்ட அரசியல் கூட்டங்களில் பங்கேற்பவர்கள் குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டதாகவும், ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படும் இடங்கள், ட்ரோன் சோதனைகள் மற்றும் உக்ரைனுக்கு வழங்கப்படும் ட்ரோன்கள் தொடர்பான தகவல்களை அவர் திரட்டியதாக சந்தேகம் எழுந்துள்ளது.
அந்த தகவல்களை அவர் ரஷ்ய தூதரக அலுவலர் ஒருவருக்கு கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், பெர்லினில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகளில் போலியான அடையாளத்தின் கீழ் பங்கேற்க ரஷ்ய நாட்டவர் ஒருவருக்கு உதவியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ரஷ்ய தூதரக அலுவலர் வெளியேற்றம்
இந்நிலையில், ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக ரஷ்ய தூதரக அலுவலர் ஒருவர் ஜேர்மனியிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நபர்தான் IIona W. என்னும் அந்தப் பெண்ணுடன் தொடர்பிலிருந்த நபர், அதாவது, இந்த நபருக்குதான் அந்தப் பெண் ரகசிய தகவல்களைத் திரட்டி கொடுத்திருக்கலாம் என கருதப்படுகிறது.
ஆகவே, ஜேர்மனிக்கான ரஷ்ய தூதரான Sergey Nechayevக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அவரிடம் அந்த ரஷ்ய தூதரக அலுவலர் ஜேர்மனியிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்ட விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டதாகவும் ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |