வெளிநாட்டு மருத்துவர் ஒருவருக்கு ஜேர்மனியில் ஆயுள் தண்டனை
சிரியா நாட்டு மருத்துவர் ஒருவருக்கு ஜேர்மன் நீதிமன்றம் ஒன்று ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
சிரியா நாட்டு மருத்துவருக்கு ஆயுள்
சிரியா நாட்டின் ஜனாதிபதியான பஷார் அல் அசாதின் ஆட்சியின் கீழ் சித்திரவதை, கொலை மற்றும் மனித இனத்துக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்ட மருத்துவரான Alaa M. என்பவருக்கு ஃப்ராங்பர்ட் நீதிமன்றம் ஒன்று ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதியான Christoph Koller, குற்றம் சாட்டப்பட்டுள்ள Alaa M. 2011க்கும் 2012க்கும் இடையில், சிரியாவிலுள்ள Homs நகரில் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும்போது, ஒன்பது பேரை படுகாயமடைய வைத்ததாகவும், மேலும் இரண்டு பேரைக் கொன்றுவிட்டதாகவும் தெரிவித்தார்.
சிரியா நாட்டின் ஜனாதிபதியான பஷார் அல் அசாதின் சர்வாதிகார, அநியாய ஆட்சியில் நடைபெற்ற கொடுங்கோலாட்சியில் Alaa Mம் பங்கு வகித்ததாகவும், தன்னை விட கீழ் நிலையிலிருப்பவர்கள் மற்றும் மதிக்கத்தகாதவர்கள் என அவர் கருதியவர்களைத் துன்புறுத்துவதை அவர் சந்தோஷத்துடன் அனுபவித்துச் செய்ததாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
இவ்வளவும் செய்துவிட்டு, ஜேர்மனிக்கு வந்து பத்து ஆண்டுகளாக எலும்பு சிகிச்சை மருத்துவராக பணியாற்றிவந்துள்ளார் Alaa M.
2020ஆம் ஆண்டு, Homs நகரில் நடந்த அராஜகங்கள் குறித்த ஆவணப்படம் ஒன்று தொலைக்காட்சியில் வெளியாக, Alaa Mஐ அடையாளம் கண்டுகொண்ட, அவரால் பாதிக்கப்பட்ட சிலர் அதிகாரிகளுக்கு தகவலளித்ததன்பேரில் அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |