தடுப்பூசி போடாதவர்களுக்கு விதிகள் கடுமையாக்கவேண்டும் - ஜேர்மனியின் புதிய துணை சான்சலர் திட்டம்
ஜேர்மனியின் புதிய துணை சான்சலர் நியமிக்கப்படவுள்ள ராபர்ட் ஹேபெ, தடுப்பூசி போடப்படாத மக்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவேண்டும் என கூறியுள்ளார்.
மீண்டும் அதிகரித்துவரும் கோவிட்-19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்த ஐரோப்பா முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படுகிறது.
செவ்வாயன்று ஜேர்மன் கூட்டாட்சி மற்றும் பிராந்திய அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, பசுமைக் கட்சியின் இணைத் தலைவரும், புதிய கூட்டாட்சி அரசாங்கத்தின் துணை சான்சலருமான ராபர்ட் ஹேபெக் (Robert Habeck), தடுப்பூசி போடப்பட்ட அல்லது மீட்கப்பட்டவர்களை மட்டுமே நாடு முழுவதும் அத்தியாவசியமற்ற கடைகள் மற்றும் "பொது அமைப்புகளில்" அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.
அதேபோல், தடுப்பூசி போடாதவர்களுக்கு மட்டும் ஊரடங்கு விதிக்கப்படவேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
கிறிஸ்துமஸ் பள்ளி விடுமுறையை முன்னோக்கி கொண்டு வருவதற்கான அல்லது நீட்டிப்பதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுடன் வரும் குளிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று ZDF தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஹேபெக் கூறினார்.
ஏற்கெனவே, ஏஞ்சலா மெர்க்கல் ஆட்சியில், கோவிட் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் பெரும் சவாலை சந்தித்தது.
தற்போது சமூக ஜனநாயகவாதியான ஓலாஃப் ஸ்கோல்ஸின் (Olaf Scholz) கீழ் ஒரு புதிய அரசாங்கம் உருவாகிறது.
இந்த நிலையில், மீண்டும் தொற்று எண்னிக்கை அதிகரித்துவருவதால், புதிய அரசுக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது.