ஜேர்மனியில் இன்று அதிகாலை நடந்த கத்திக்குத்து சம்பவம்! ஒருவர் பலி, மூவர் கவலைக்கிடம்
ஜேர்மனியில் இரண்டு பேரை கத்தியால் குத்திவிட்டு தப்பிக்க முயன்ற நபர் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியின் கிழக்கு பகுதியில் உள்ள Bernsdorf நகரத்தில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.
தகவல்களின்படி, திங்கட்கிழமை மாலை இரண்டு இளைஞர்கள் ஒரு குடியிருப்பில் சந்தித்துள்ளனர். இருவரும் இரவு முழுவதும் மதுபானங்களை குடித்து, மேலும் போதைப்பொருட்களையம் பயன்படுத்தியுள்ளனர்.
கொண்டாட்டத்தில் இருந்த இருவருக்கும் இடையில் திடீரென சண்டை மூண்டுள்ளது. கைகலப்பு ஏற்பட்டு, சத்தம் வீட்டை தாண்டி அக்கம் பக்கத்தினருக்கு தொல்லையை கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், பக்கத்து வீட்டில் இருந்த வயதான தம்பதியினர், இருவரையும் தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது, போதையில் இருந்த இளைஞர்களில் ஒருவர் திடீரென கத்தியை எடுத்துவந்து, முதியவர்கள் இருவரையும் கத்தியால் குத்தியுள்ளார்.
Photo: Harry Haertel/BIld
பிறகு அந்த நபர், ஜன்னல் வழியாக கீழே குதித்துள்ளார். கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
சில நிமிடங்களில் தகவல் கொடுக்கப்பட்டு, பொலிஸார் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் சம்பவ இடத்துக்கு வந்த நிலையில், கத்தியால் குத்தப்பட்ட வயதான தம்பதியினர் இருவரும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, சண்டை போட்டுக்கொண்ட மற்றோரு இளைஞருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், அவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், கிழே விழுந்து உயிரிழந்த அந்த நபர், அவராக விழுந்தாரா அல்லது ஜன்னல் வழியாக அவர் தள்ளிவிடப்பட்டாரா என்பது தெரியவில்லை. இந்நிலையில், இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.