புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த அழுத்தம் கொடுக்கும் மாகாணங்கள்: ஜேர்மன் ஆளுநர்களை சந்தித்த சேன்ஸலர்
கடந்த சில வாரங்களாக, ஜேர்மன் அரசியலில் பெரும் சலசலப்பு நிலவிவருகிறது. புகலிடக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாத புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதை எளிதாக்குவதற்கான சட்டம், ஆட்கடத்தல்காரர்களுக்கான தண்டனையை கடுமையாக்குதல் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் விரைவில் வேலை செய்ய அனுமதித்தல், மற்றும் போலந்து, செக் குடியரசு மற்றும் சுவிஸ் எல்லைகளில் தற்காலிக சுங்கச் சோதனைகளை அறிமுகப்படுத்துதல் என பல நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன.
திடீரென மனம் மாறியுள்ள ஜேர்மன் சேன்ஸலர்
பதவியேற்கும் முன்பிருந்தே வெளிப்படையாக புலம்பெயர்தலை ஆதரித்துவந்த ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ், திடீரென புலம்பெயர்தலுக்கு எதிராக, கடுமையான கருத்துக்களைத் தெரிவிக்கத் துவங்கியுள்ளார்.
அதற்குக் காரணம், ஜேர்மனியில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில், பழமைவாத மற்றும் தீவிர வலதுசாரிக் கட்சிகள் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளன. ஆளும் ஓலாஃப் கட்சியோ பின்னடைவைச் சந்தித்துள்ளது.
புலம்பெயர்தல் தொடர்பில் ஜேர்மன் மக்களுக்கு உருவாகியுள்ள கவலைகளே, புலம்பெயர்தலுக்கு எதிரான கருத்துக்கள் கொண்ட வலதுசாரியினருக்கு ஆதரவாக அவர்களை வாக்களிக்கத் தூண்டியதாக கருத்துக்கள் பரவிவருகின்றன.
ஆக, மக்களிடையே புலம்பெயர்தலுக்கு எதிரான மன நிலை உருவாகிவரும் நிலையில், தங்கள் கூட்டணிக் கட்சி புலம்பெயர்தலுக்கு ஆதரவு தெரிப்பதே தங்கள் கூட்டணிக் கட்சிகளின் பின்னடைவுக்குக் காரணம் என்பதை புரிந்துகொண்ட ஓலாஃப், புலம்பெயர்தலுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையாகக் கூறத் துவங்கியுள்ளார்.
அழுத்தம் கொடுக்கும் மாகாணங்கள்
இந்நிலையில், புலம்பெயர்ந்தோரின் செலவுகளுக்காக மாகாணங்கள் பெடரல் அரசிடம் கூடுதல் நிதி கேட்கின்றன. எதிர்க்கட்சிகள் ஒருபுறம் அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க, மாகாணங்கள் நிதி ரீதியாக அழுத்தம் கொடுக்க, ஏராளமான புலம்பெயர்ந்தோர் ஜேர்மனிக்கு வருகிறார்கள் என்று கூறும் நிலைக்கு ஆளாகியுள்ளார் ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ்.
மாகாண ஆளுநர்கள், சேன்ஸலருடனான சந்திப்பில், சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதால், முறைப்படி ஜேர்மனியில் பாதுகாப்பு கோருவோருக்கு புகலிடம் கொடுக்கலாம் என்றும், குறைவான எண்ணிக்கையில் புகலிடம் பெற்றுள்ள நாடுகளிலிருந்து வரும் புலம்பெயர்ந்தோருக்கு விரைவாக புகலிடம் வழங்க வழிவகை உருவாகும் என்றும் கூறியுள்ளனர்.
ஆப்பிரிக்கா பக்கம் திரும்பும் பார்வை
மாகாண ஆளுநர்கள் மட்டுமின்றி, சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸின் கட்சியினரின் பார்வையும் தற்போது ஆப்பிரிக்கா பக்கம் திரும்பிவருகிறது.
ஷோல்ஸ் அரசு, புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றுக்கொள்ளும் வகையில், ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடத்த முயன்று வருகிறது. அதற்கு பதிலாக, சட்டப்படி புலம்பெயர்வோருக்கு வாய்ப்பளிக்கவும் ஜேர்மன் அரசு திட்டமிட்டுவருகிறது. ஆனால், திடீரென ஜேர்மனி ஏன் ஆப்பிரிக்க நாடுகள் மீது ஆர்வம் காட்டிவருகிறது என்ற சந்தேகமும் எழுந்துள்ளதையும் மறுப்பதற்கில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |