ஜேர்மனியில் பயங்கரம்! 2-ம் உலகப்போர் வெடிகுண்டு வெடித்ததில் 4 பேர் காயம்
ஜேர்மனியில் இரண்டாம் உலகப் போரின் வெடிகுண்டு ஒன்று வெடித்ததில் 4 பேர் காயமடைந்தனர்.
ஜேர்மனியின் பவேரியா மாநிலத்தின் தலைநகரான முனிச்சில், பரபரப்பான பிரதான ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பாலத்தில் இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டு வெடித்தது.
இந்த சம்பவத்தில் 4 பேர் காயமடைந்தனர், அதில் ஒருவர் படுகாயமடைந்தார்.
போர் முடிந்து 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஜேர்மனியில் ஒவ்வொரு ஆண்டும் 2,000 டன்களுக்கும் அதிகமான உயிருள்ள வெடிகுண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.
Photo: AP
பிரித்தானிய மற்றும் அமெரிக்க போர் விமானங்கள் ஜேர்மனியின் மீது 1.5 மில்லியன் டன் குண்டுகளை வீசி, 600,000 மக்களைக் கொன்றது.
அதில், 15 சதவீத சாதனங்கள் வெடிக்கத் தவறியதாக அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர், அவற்றில் சில தரையில் 6 மீட்டர் (20 அடி) ஆழத்தில் புதைந்துள்ளன.
சுரங்கப்பாதை அமைப்பதற்காக அந்த இடம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும், அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும், அந்தப் பகுதிக்கு வெளியே எந்த ஆபத்தும் இல்லை என்று அவர்கள் கூறினர்.
வெடிகுண்டு எச்சங்களை ஆய்வு செய்வதற்காக வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.
குண்டுவெடிப்பு காரணமாக, ரயில் நிலையத்திற்குச் செல்லும் மற்றும் வெளியேறும் ரயில் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டது என்று ரயில் ஆபரேட்டர் Deutsche Bahn தெரிவித்துள்ளார்.
சேவைகள் எப்போது மீண்டும் தொடங்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஜேர்மனியில் கட்டுமானப் பணிகளின் போது தொடர்ந்து இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு வல்லுநர்களால் செயலிழக்கச் செய்யப்படுகின்றன அல்லது வெடிக்கவைத்து அழிக்கப்படுகின்றன.
இருப்பினும், கடந்த காலங்களில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தவண்ணம் உள்ளன.