ஜேர்மனி எதற்கும் தயாராக இருக்கவேண்டும்: புதிய கொரோனா வைரஸ் குறித்து அறிவியலாளர் எச்சரிக்கை
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள திடீர் மாற்றம் பெற்ற Omicron கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சத்தை உருவாக்கியுள்ள நிலையில், தான் அது குறித்து கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ள ஜேர்மன் அறிவியலாளர் ஒருவர், ஜேர்மனி எதற்கும் தயாராக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
பெர்லினிலுள்ள Charité மருத்துவமனையின் வைராலஜி துறையின் தலைவரான Christian Drosten, தான் இந்த Omicron வகை கொரோனா வைரஸ் குறித்து கவலையடைந்திருப்பதாகவும், அது இத்தனை திடீர் மாற்றங்களைப் பெற்றிருப்பது தன்னை ஆச்சரியமடையச் செய்துள்ளதாகவும், ஆனால், இப்போதைக்கு இந்த திடீர் மாற்றங்கள் மக்களின் அன்றாட வாழ்வை எந்த வகையில் பாதிக்கப்போகின்றன என்பது யாருக்கும் தெரியாது என்றும் கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட Omicron வகை கொரோனா வைரஸ், தற்போது ஜேர்மனியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்ற வார இறுதியில், Munichஇல் மூன்று சுற்றுலாப்பயணிகளுக்கு Omicron வகை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. Hesseஇல், தென்னாப்பிரிக்காவிலிருந்து ஜேர்மனி திரும்பிய ஒருவருக்கு இந்த கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிக மக்கள்தொகை கொண்ட North Rhine-Westphaliaவில், Essen மற்றும் Düsseldorf ஆகிய இடங்களில் சிலருக்கு இந்த புதிய தொற்று இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த தொற்று குறித்து பேசிய Christian Drosten, பெரும்பாலும் இந்த தொற்று இளம் வயதினரைத் தாக்குவதாகவும், ஏற்கனவே தொற்றுக்கு ஆளானவர்களை குறிவைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்னும் அந்த வைரஸ் குறித்து முழுமையாகத் தெரியாத நிலையில், தடுப்பூசி பெற்றுக்கொள்வதும், சொல்லப்போனால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொள்வதும் நல்லது என உறுதியாகச் சொல்லலாம் என்கிறார் அவர்.
ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இப்போதே இந்த புதிய கொரோனா தொற்றை சீரியஸாக எடுத்துக்கொள்வது நல்லது என்று கூறும் Drosten, இந்த புதிய கொரோனாவை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசிகளில் மாற்றங்கள் செய்யப்படவேண்டுமா என்பதை அறிய இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஆகும் என்கிறார்.