ஜேர்மனியில் குடிவரவுகளை அதிகரிக்க முடிவு!
தொழிலாளர் பற்றாக்குறையை தவிர்க்க ஜேர்மனிக்கு அதிக குடியேற்றம் தேவை என அந்நாட்டின் பொருளாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜேர்மனி, மக்கள்தொகை நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இதன் காரணமாக கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டில் தொழிலாளர் பற்றாக்குறையைத் தடுக்க, குடிவரவுகளை அதிகரிக்க வேண்டும் என்று பொருளாதார அமைச்சர் ராபர்ட் ஹேபெக் (Robert Habeck) கூறியுள்ளார்.
"இன்று எங்களிடம் 300,000 வேலை வாய்ப்புகள் உள்ளன, மேலும் அது ஒரு மில்லியனுக்கும் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று பசுமைக் கட்சியின் தலைவரம் பொருளாதார அமைச்சருமான ராபர்ட் ஹேபெக் ஒரு செய்தி மாநாட்டில் கூறினார்.
Photo: REUTERS/Michele Tantussi
"நாங்கள் அந்த இடைவெளியை நிரப்பவில்லை என்றால், எங்களுக்கு உண்மையான உற்பத்தித்திறன் சிக்கல்கள் இருக்கும்" என்று அவர் கூறினார்.
தொழிலாளர் சந்தையில் நுழையும் இளையவர்களை விட அதிக வயதான தொழிலாளர்கள் ஓய்வு பெறுவதால், இந்த ஆண்டு தொழிலாளர் எண்ணிக்கை 300,000 குறையும் என்று German Economic Institute மதிப்பிட்டுள்ளது.
இந்த இடைவெளி 2029-ல் 650,000-க்கும் அதிகமாக விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 2030-ல் சுமார் 5 மில்லியனுக்கும் அதிகமான வேலை செய்யும் வயதினரின் பற்றாக்குறையை உருவாக்கும்.
இந்நிலையில், குடிவரவுகளை அதிகரிக்க வெளிநாட்டில் இருந்து திறமையான தொழிலாளர்களுக்கான தடைகளை குறைத்து, தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை ஒரு மணி நேரத்திற்கு 12 யூரோக்களாக (13.60 டொலர்) உயர்த்துவது உட்பட பல்வேறு நடவடிக்கைகளுடன் பணியை மீண்டும் கவர்ச்சிகரமானதாக மாற்ற வேண்டும் என்ற கூட்டணி பேச்சுவார்த்தையில் ஆளும் கட்சிகள் ஒப்புக்கொண்டுள்ளன.