ஜேர்மனியில் செப்டம்பர் முதல் அடுத்தக்கட்ட தடுப்பூசி நடவடிக்கை அறிவிப்பு!
ஜேர்மன் அரசாங்கம் செப்டம்பர் மாதம் முதல் கோவிட் பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்கத் தொடங்கும் என அறிவித்துள்ளது.
ஜேர்மனியில் உள்ளூர் நேரப்படி திங்களன்று, சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் (Jens Spahn) மற்றும் 16 மாநில சுகாதார அமைச்சர்களுடன் ஒரு கூட்டு பேச்சுவார்த்தையை மேற்கொண்டார்.
அப்போது, சில குழுக்களிடையே நோயெதிர்ப்பு சக்தி வேகமாக குறைந்து வருவதைப் பற்றிய கவலையை மேற்கோள் காட்டி, செப்டம்பர் மாதம் முதல் வயதானவர்கள் மற்றும் ஆபத்தில் உள்ளவர்களுக்கு ஒரு பூஸ்டர் ஷாட் (கூடுதல் தடுப்பூசி) வழங்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
மேலும், டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவுவதைப் பற்றிய கவலையின் மத்தியில், 12 முதல் 17 வயதுடையவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட சுகாதார அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளது.
கவனிப்பு மற்றும் நர்சிங் ஹோம்களுக்கு மொபைல் தடுப்பூசி குழுக்கள் அனுப்பப்பட வேண்டும் என்றும், அவர்கள் முதலில் எந்த தடுப்பூசியைப் செலுத்தியுள்ளார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் ஃபைசர்/பயோஎன்டெக் அல்லது மாடர்னா பூஸ்டர் ஷாட்களை வழங்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரண்டு டோஸ் அஸ்ட்ராஜெனெகா அல்லது ஒற்றை டோஸ் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகளைப் பெற்ற எவருக்கும் பூஸ்டர் ஷாட் வழங்கப்படும் என்றும் ஸ்பான் அமைச்சகம் வெளியிட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
AstraZeneca மற்றும் Johnson & Johnson இரண்டும் வைரஸ் திசையன் (viral vector) தடுப்பூசிகள் ஆகும், அதேசமயம் ஆய்வுகளில் அதிக செயல்திறனைக் காட்டியுள்ள பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் நாவல் mRNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் தடுப்பூசிகள் என்பது குறிப்பிடத்தக்கது.