ஜேர்மனியை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்தோர்: தடுக்க கட்சி ஒன்று முன்வைத்துள்ள திட்டம்
ஜேர்மனியில், 2024ஆம் ஆண்டு இறுதி நிலவரப்படி 1.4 மில்லியன் பணியிடங்கள் காலியாக இருந்ததாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் ஏராளமான புலம்பெயர்வோர் வேலைக்காக ஜேர்மனிக்கு வந்துள்ளார்கள்.
ஜேர்மனியை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்தோர்
ஆனால், ஜேர்மனிக்கு வந்துள்ள பணியாளர்களில் 2.6 மில்லியன் பேர், ஜேர்மனியிலிருந்து வெளியேற திட்டமிட்டதாக ஃபெடரல் வேலைவாய்ப்பு ஏஜன்சி மேற்கொண்ட ஆய்வொன்று தெரிவிக்கிறது.
அவர்களில் 300,000 பேர், ஜேர்மனியிலிருந்து நிச்சயம் வெளியேறப்போவதாக தெரிவித்துள்ளார்கள்.
வரிகள், சமூக பாதுகாப்புக்கான வழங்கல் மற்றும் அதிகப்படியான அதிகாரத்துவம். வேலை செய்யும் இடத்திலும், வீடு வாடகைக்கு பிடித்தல், வாங்குதல் மற்றும் பொது இடங்களிலும், பொலிசாரிடமும் எதிர்கொள்ளும் பாரபட்சம் முதலான காரணங்களால் அவர்கள் ஜேர்மனியை விட்டு வெளியேற திட்டமிட்டுவருவதாக தெரிவித்துள்ளார்கள்.
கட்சி ஒன்று முன்வைத்துள்ள திட்டம்
விடயம் என்னவென்றால், ஜேர்மனி புலம்பெயர்ந்தோரை மோசமாக நடத்தினாலும், உண்மையில் ஜேர்மனிக்கு ஆண்டொன்றிற்கு கூடுதலாக சுமார் 400,000 புலம்பெயர் பணியாளர்கள் தேவை.
ஆக, இப்படி அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறும் பட்சத்தில், அது பணியாளர் பற்றாக்குறையை மட்டுமின்றி, அரசின் வருவாயையும் பாதிக்கும்.
ஆகவே, ஜேர்மனி இந்த புலம்பெயர் பணியாளர்களை தக்கவைத்துக்கொள்வது அவசியம்.
அதாவது, அவர்கள் எதிர்பார்க்கும் பாரபட்சமின்மை, வரிகளிலிருந்து விலக்கு, அங்கீகாரம் போன்ற விடயங்களை அவர்களுக்கு வழங்குவதன் மூலம் ஜேர்மனி புலம்பெயர் பணியாளர்களை தக்கவைத்துக்கொள்ள முடியும்.
ஆனால், ஜேர்மன் ஆட்சியாளர்கள் அதைச் செய்வார்களா என்பது தெரியவில்லை.
மாறாக, கட்டுப்பாடுகள் மூலம் அதைச் செய்யவே சில கட்சிகள் முயல்கின்றன. உதாரணமாக, ஆளும் கட்சிகளில் ஒன்றான CDU கட்சி, ஜேர்மனிக்கு மருத்துவம் கற்க வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கட்டுப்பாடு ஒன்றை விதிக்க அழைப்பு விடுத்துள்ளது.
அதாவது, ஜேர்மனியில் மருத்துவம் பயில்வோர், கற்று முடித்ததும் தங்கள் நாட்டுக்கு உடனடியாக திரும்பிச் செல்ல அனுமதிக்கக்கூடாது.
அவர்கள் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு ஜேர்மனியில், குறிப்பாக, கிராமப்புறங்களில் கட்டாயமாக மருத்துவராக பணியாற்றவேண்டும்.
அதற்கு சம்மதிக்காதவர்கள், தாங்கள் மருத்துவம் கற்பதற்கு ஆன செலவை திருப்பிச் செலுத்தவேண்டும் என்னும் வகையில் கட்டுப்பாடு விதிக்கவேண்டும் என்று கூறியுள்ளார் CDU கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Sepp Müller என்பவர்.
ஜேர்மன் சுகாதாரத்துறையும் இந்த திட்டத்தை வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |