சுற்றுலாவுக்கு புகழ் பெற்ற தீவில் ஜேர்மனியின் மிதக்கும் எரிவாயு உற்பத்தி நிலையம்: உருவாகியுள்ள சர்ச்சை
தனது எரிவாயுத் தேகைக்காக ஒரு காலத்தில் ரஷ்யாவையே பெருமளவில் சார்ந்திருந்தது ஜேர்மனி. ஆனால், உக்ரைன் போரைத் தொடர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக ஜேர்மனிக்கு வழங்கப்பட்ட எரிவாயுவைக் குறைத்துக் கொண்டே வந்த ரஷ்யா, ஒரு கட்டத்தில் முற்றிலும் எரிவாயு வழங்கலை நிறுத்திவிட்டது.
சொந்தக்காலில் நிற்க முடிவு செய்த ஜேர்மனி
இனி ரஷ்யாவை சார்ந்திருக்கக்கூடாது என முடிவு செய்த ஜேர்மனி, சொந்தக்காலில் நிற்க முடிவு செய்தது. அதன்படி, கடலில் மிதக்கும் திரவ இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையம் மற்றும் சேமிப்பகம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுவந்தது அந்நாடு.
Image: Stefan Sauer/dpa/picture alliance
இந்நிலையில், 985 அடி நீளமுள்ள The Energos Power என்னும் மிதக்கும் எரிவாயு உற்பத்தி நிலையம், பால்டிக் கடலில் அமைந்துள்ள ஜேர்மனிக்கு சொந்தமான, Rügen தீவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இப்போதைக்கு, நார்வேயிடமிருந்து பெறப்பட்ட எரிவாயு அந்த மிதக்கும் எரிவாயு உற்பத்தி நிலையத்திலுள்ள சேமிப்பகத்தில் சேமிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து, குழாய் மூலம் எரிவாயு ஜேர்மனியை வந்தடையும். இதுதான் திட்டம்.
உருவாகியுள்ள சர்ச்சை
நிலப்பரப்பை வீணாக்காமல் உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்துக்கு ஒருபக்கம் பாராட்டுக்கள் கிடைத்துவரும் நிலையில், அதற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
Image: akg-images/picture alliance
அதாவது, இந்த மிதக்கும் எரிவாயு உற்பத்தி நிலையம், பால்டிக் கடலில் அமைந்துள்ள Rügen தீவில் நிறுத்தப்பட்டுள்ளது.
Rügen தீவு, சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற, இயற்கை அழகு மிகுந்த ஒரு இடமாகும். அங்கு இந்த மிதக்கும் எரிவாயு உற்பத்தி நிலையத்தைக் கொண்டு நிறுத்துவதால், அத்தீவு படிம எரிபொருள் ஆற்றல் பூங்காவாக ஆகிவிடும் என்று கூறி இயற்கை ஆர்வலர்கள் விமரசனங்கள் முன்வைத்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |