ஜேர்மனியில் பயங்கரம்! ஒரே வீட்டில் 2 குழந்தைகள் உட்பட மூவர் சுட்டுக்கொலை
ஜேர்மனியின் க்ளிண்டே நகரில் உள்ள வீடொன்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
குறித்த சம்பவம் Schleswig-Holstein மாநிலத்தில் Hamburg அருகே உள்ள Glinde நகரில் நடந்துள்ளது. இது ஒரு குடும்ப வன்முறைச் சம்பவம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில், 11 வயது மற்றும் 13 வயதுடைய இரண்டு குழந்தைகள், 44 வயதுடைய ஆண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும், சம்பவ இடத்தில் 38 வயதுடைய பெண் ஒருவர் பலத்த துப்பாக்கிச்சூடு காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த சந்தேகத்திற்குரிய குடும்ப வன்முறை சம்பவம் குறித்து Lübeck அரசு வழக்கறிஞர் விசாரணை நடத்தி வருகிறார்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் யார் என்றோ, 44 வயதான நபர் குழந்தைகளின் தந்தையா என்றோ அரசு வழக்கறிஞர் அலுவலகம் கூறவில்லை.
ஜேர்மனி அதிக குடும்ப வன்முறையை சந்தித்துவருகிறது. இந்த மாத தொடக்கத்தில், பிராண்டன்பர்க்கில் குடும்ப வன்முறை சம்பவங்களில் மூன்று குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்கள் கொல்லப்பட்டனர்.
2020-ஆம் ஆண்டில், 119,164 பெண்களும் 28,867 ஆண்களும் வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஜேர்மன் ஃபெடரல் கிரிமினல் பொலிஸ் அலுவலகம் (PKA) தெரிவித்துள்ளது - இது முந்தைய ஆண்டை விட சுமார் 5% அதிகரித்துள்ளது.