ஜேர்மனியில் இனி இது இலவசமாக கிடைக்காது! அரசாங்கம் அதிரடி முடிவு
தடுப்பூசி போடப்படாமல் இருப்பவர்களுக்கு தொடர்ந்து இலவசமாக கோவிட் சோதனை செய்ய முடியாது என ஜேர்மன் அரசாங்கம் அதிரடி முடிவை எடுத்துள்ளது.
ஜேர்மனியில், பல மாதங்களாக அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் இலவச கொரோனா வைரஸ் ஆன்டிஜென் சோதனைகளை வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி தடுப்பூசி போடாமல் இருக்கும் பெரியவர்களுக்கு அரசு இலவசமாக சோதனை செய்வதை நிறுத்திவிடும் என்று அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
அக்டோபர் 11 முதல், இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 18 வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் அல்லது தடுப்பூசி போடாத மருத்துவக் காரணங்கள் உள்ள மற்றவர்களுக்கு எந்த கட்டணமும் இல்லாமல் சோதனைகள் தொடர்ந்து கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் முதல், ஒவ்வொரூ வாரமும், ஒவ்வொரு குடியிருப்பாளரும் குறைந்தது ஒரு முறை கோவிட் சோதனை செய்த நிலையில், அரசாங்கம் இதுவரை பில்லியன் கணக்கான பணத்தை சோதனைகளுக்காக மட்டும் செலவழித்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் டெல்டா வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிவரும் நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று, அனைத்து மாநில ஆளுநர்களுடன் அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் புதிய விதிமுறைகள் குறித்து கலந்துரையாடினார். இந்நிலையில், புதிய விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.