ஜேர்மனியில் பல்வேறு துறைகளுக்கு ஏராளம் பணியாளர்கள் தேவை
கனரக தொழில்துறை முதல் மருத்துவத்துறை வரை, ஜேர்மனியில் பல்வேறு துறைகளில் கடும் பணியாளர் தட்டுப்பாடு நிலவுகிறது.
உணவகங்களுக்குச் சென்றால் மேசைகள் காலியாக இருக்கிறதே என சென்று உட்கார்ந்தால், உணவு தயாரிக்கவோ, பரிமாறவோ அங்கு ஆட்கள் இல்லை.
உணவகத் துறை மட்டுமில்லை, ரயில்களும் விமானங்களும் காலதாமதமாக வருகின்றன, அல்லது ரத்து செய்யப்படுகின்றன. காரணம், பணியாளர்கள் தட்டுப்பாடு. இப்படி, 56 சதவிகித நிறுவனங்கள் பணியாளர் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்துள்ளன.
148 வகை பணியிடங்களில் கடும் பணியாளர் தட்டுப்பாடு நிலவுவதாக ஜேர்மன் பெடரல் வேலைவாய்ப்பு ஏஜன்சி தெரிவிக்கிறது. 122 வகை பணியிடங்கள் ஆட்கள் இல்லாததால் அபாய நிலையில் உள்ளன. ஒரு முதியோர் இல்லத்தில் பணியிடங்களை நிரப்ப எட்டு மாதங்கள் காத்திருக்கவேண்டியுள்ளது. கட்டுமான நிறுவனங்களோ ஆறு மாதங்கள் காத்திருக்கவேண்டும். நாடு முழுவதும் 1.7 மில்லியனுக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன.
@Sabine Kinkartz/DW
கனடா போன்ற மற்ற நாடுகளைப்போலவே, ஏராளமானோர் ஓய்வு பெறுகிறார்கள், ஓய்வு பெற இருக்கிறார்கள், அந்த காலியிடங்களை நிரப்ப ஆட்கள் இல்லை.
ஆண்டொன்றிற்கு ஜேர்மனிக்கு 400,000 பணியாளர்கள் தேவைப்படும் நிலையில், வெளிநாட்டுப் பணியாளர்களைக் கவர்ந்திழுப்பதற்காக 2020ஆம் ஆண்டு ஜேர்மனி சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தது. ஆனால், அதற்கு அடுத்த ஆண்டு, வெறும் 30,000 பேர்தான் பணிக்கு வந்தார்கள்.
@Michael Bihmaer /HROMORANGE/Picture Alliance
ஆக, இவ்வளவு பணியிடங்கள் காலியாக இருந்தும், போதுமான பணியாளர்கள் கிடைக்கவில்லை என்பதிலிருந்து அந்த சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படுவது அவசியம் என்பது நன்கு புலனாகிறது. அத்துடன் புகலிட விதிகளில் மறுசீரமைப்பு தேவைப்படுகிறது என்கிறார்கள் பணி வழங்குவோர்.
புலம்பெயர்வோர் எளிதில் நாட்டுக்கு வந்து பணிகளைப் பெறுவதை எளிதாக்கும் வகையில் இப்போதிருக்கும் விதிகளை மாற்றினால்தான் ஜேர்மனியில் பணியாளர் தட்டுப்பாடு பிரச்சினை சீராக வாய்ப்புள்ளது எனலாம். அப்போது தகுதியுடையோர் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி தாங்களும் பலன் பெறலாம், ஜேர்மனியின் பணியாளர் தட்டுப்பாடு பிரச்சினையும் தீரும்.
@Christoph Schmidt/ Dpa/ Picture Alliance