ரஷ்யா வழங்கும் எரிவாயுவின் அளவைக் குறைத்துள்ளதால் ஜேர்மனி எடுக்கும் நடவடிக்கைகள்
ரஷ்யா ஜேர்மனிக்கு வழங்கும் எரிவாயுவின் அளவைக் குறைத்துள்ளதையடுத்து, அதை ஈடுகட்டுவதற்காக மாற்று நடவடிக்கைகளை அறிவித்துள்ளது ஜேர்மனி.
அதன்படி, மின்சாரம் தயாரிப்பதற்காக எரிவாயுவைப் பயன்படுத்துவதை ஜேர்மனி குறைக்க இருப்பதாக ஜேர்மன் பொருளாதார அமைச்சரான Robert Habeck தெரிவித்துள்ளார்.
எரிவாயு பயன்பாட்டைக் குறைப்பதற்காக, மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் எரிவாயுவின் அளவைக் குறைத்துவிட்டு, அதற்கு பதிலாக, நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் மின் நிலையங்களை பயன்படுத்த ஜேர்மனி திட்டமிட்டு வருவதாக Habeck தெரிவித்தார்.
ரஷ்ய எரிவாயு நிறுவனமான Gazprom, Nord Stream pipeline திட்டத்தின் வாயிலாக ஜேர்மனிக்கு வழங்கும் எரிவாயுவின் அளவைக் குறைத்ததைத் தொடர்ந்து, 2030இல் நிலக்கரியின் பயன்பாட்டைக் குறைக்க இருப்பதாக அறிவித்த கூட்டணிக்கட்சிகளின் வாக்குறுதிகளை மீறி, மறுபடியும் நிலக்கரியைப் பயன்படுத்தும் ஒரு நிலை ஜேர்மனிக்கு உருவாகியுள்ளது.
அது கசப்பான விடயம்தான் என்று கூறியுள்ள Habeck, ஆனாலும் எரிவாயுப் பயன்பட்டைக் குறைப்பதற்கு அதைத் தவிர வேறு வழியில்லை என்பதாலேயே அந்த முடிவை எடுக்கவேண்டியதாகியுள்ளது என்கிறார்.