ஜேர்மனியில் கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைக்குமா? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்
உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்த பிறகு ஜேர்மனியில் கோவாக்சின் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என தெரியவந்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு (WHO) இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்த பிறகு ஜேர்மனியில் அதனை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என இந்தியாவுக்கான ஜேர்மன் தூதர் வால்டர் ஜே லிண்ட்னர் (Walter J Lindner) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ள அவர், "ஜேர்மனியில் கோவிட் எதிர்ப்பு தடுப்பூசியாக கோவிஷீல்ட் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, பயனாளிகளுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது" என்று கூறுகிறார்.
சமீபத்தில், பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அக்டோபர் மாத இறுதிக்குள் உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் அளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து வால்டர் ஜே லிண்ட்னர் இந்த தகவலை கூறியுள்ளார்.
Picture: Twitter@AmbLindnerIndia, PTI
ஆனால், தற்போதைய நிலையில், "கோவாக்சின் செலுத்தியுள்ள பயணிகள் ஜேர்மனியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும், ஏனெனில் அது இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை" என்று அவர் கூறினார்.
அவரைப் பொறுத்தவரை, கோவாக்சின் அல்லது வேறு எந்த அங்கீகரிக்கப்படாத தடுப்பூசியும் போடப்பட்டவர்கள் ஜேர்மனியில் நுழைய கோவிட்-19 எதிர்மறை சோதனை அறிக்கையை அளிக்க வேண்டும் என்றார்.
ஜேர்மனியில் இதுவரை கோவிஷீல்டு உட்பட பயோஎன்டெக்/ஃபைசர், ஜான்சன், மாடர்னா மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகிய 5 தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பாரத் பயோடெக் மருந்து நிறுவனத்தால் கோவிட்-19க்கு எதிரான மருந்தாக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியே கோவாக்சின் (Covaxin) ஆகும். இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டு உள்ளூரிலேயே உற்பத்தி செய்யப்படும் இந்த தடுப்பூசி, இந்தியாவில் மட்டுமின்றி 9-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.