நவம்பர் மாதம் முதல்... கொரோனா தடுப்பூசி பெறாதவர்களுக்கு ஜேர்மனியில் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம்
ஜேர்மனியில், கொரோனா தடுப்பூசி பெறாதவர்களுக்கு நவம்பர் மாதம் முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள், அல்லது கொரோனா அபாய நாடு ஒன்றிலிருந்து ஜேர்மனிக்குத் திரும்புவோர், தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளும்போது அவர்கள் பணிக்குச் செல்ல முடியாது என்பதால், அவர்கள் அந்த நாட்களில் இழந்த ஊதியத்தை, குறைந்த பட்சம் ஐந்து நாட்களுக்கான ஊதியத்தை ஜேர்மன் அரசே வழங்கி வந்தது.
நவம்பர் 1 முதல் அந்த சலுகை கிடையாது என ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சரான Jens Spahn அறிவித்துள்ளார்.
மக்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதை ஊக்குவிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக அவர் நேற்று தெரிவித்தார்.
மேலும், தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் ஜேர்மனிக்கு வந்தால் அவர்களுக்கு தனிமைப்படுத்தல் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி கட்டாயமாக்கப்படவேண்டும் என்பதை நாட்டின் பல மாகாணங்கள் ஒப்புக்கொள்ளவில்லை, ஆனால், தடுப்பூசி பெறாதவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டும் என்ற விடயம் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
பல ஜேர்மன் மாகாணங்கள், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை அணுக தடுப்பூசி பெற்றவர்கள் அல்லது கொரோனாவிலிருந்து தாங்கள் சமீபத்தில் விடுபட்டவர்கள் என்பதற்கான ஆதாரத்தைக் காட்டுபவர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற விதியை அறிமுகம் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் எப்படியாவது மக்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவைக்க ஜேர்மன் அரசு முயன்று வருகிறது.