ஜேர்மனி எப்போது கொரோனாவை மேற்கொள்ளும்?: சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
ஜேர்மனி 2022ஆம் ஆண்டு, இளவேனிற்காலத்தில் கொரோனாவை மேற்கொண்டுவிடும் என ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் அடுத்த ஆண்டு இளவேனிற்காலத்தில் கொரோனா முடிவுக்கு வந்துவிடும் என தான் நம்புவதாக ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சரான Jens Spahn தெரிவித்துள்ளார்
தடுப்பூசியால் எதிர்க்க இயலாத ஒரு திடீர் மாற்றம் பெற்ற புதிய கொரோனா வைரஸ் ஒன்று உருவாகாத வரையில், (அப்படி உருவாகும் வாய்ப்பு குறைவுதான்), இளவேனிற்காலத்தின்போது நாம் கொரோனாவை மேற்கொண்டு சகஜ வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவோம் என்றார் அவர்.
எந்த தொற்றானாலும், நீண்ட காலத்துக்கு அது இருக்கும் பட்சத்தில் தானாகவே மந்தை நோயெதிர்ப்பு சக்தி உருவாகிவிடும் என்றார் அவர். ஆனால், அது வைரஸ் பரவல் காரணமாக உருவாகுமா அல்லது தடுப்பூசியால் உருவாகுமா என்பது கேள்விக்குறியே!
ஆனால், தடுப்பூசி அந்த இலக்கை அடைவதற்கு நிச்சயம் பாதுகாப்பான வழி என்கிறார் Spahn.
தடுப்பூசி பெறாதவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாக அதிக வாய்ப்புள்ளது என்று கூறும் Spahn, ஆகவே, தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத மக்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.