ஜேர்மனியில் தொடரும் பெருவெள்ள பாதிப்பு: விரிசல் விட்டிருக்கும் அணை... அச்சத்தில் ஆயிரக்கணக்கான மக்கள்
ஜேர்மன் நகரம் ஒன்றில் கட்டப்பட்டுள்ள அணை ஒன்று எப்போது உடையுமோ என்ற அச்சத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கடவுளை வேண்டிக்கொண்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பாவில் கொட்டித்தீர்த்த மழையால் பல்வேறு நாடுகள் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜேர்மனி வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ளது.
106 பேர் ஜேர்மனியில் மட்டும் பலியாகியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோரை காணாததால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையில், ஏற்கனவே இருக்கும் பிரச்சினைகள் போதாதென புதிதாக ஒரு பிரச்சினை உருவாகியுள்ளது. Bonn நகரத்துக்கு அருகிலுள்ள Euskirchen பகுதியில் கட்டப்பட்டுள்ள அணை ஒன்றில் விரிசல்கள் ஏற்படத்துவங்கியுள்ளதையடுத்து, அப்பகுதியில் வாழும் 4,500 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
ஏதாவது அற்புதம் நடக்காதா, தங்கள் கிராமங்கள் காப்பாற்றப்படாதா என அப்பகுதி மக்கள் கடவுளை வேண்டிக்கொண்டிருக்கிறார்கள்.
மூன்று மாதங்களில் பெய்யவேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததையடுத்து, எக்கச்சக்கமான தண்ணீர் அணையை வந்தடைந்துள்ளது. அதனால், எந்த நேரத்திலும் அணை உடையலாம் என பொறியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
அந்த அணை, உபரி நீரை வெளியேற்றும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மரங்கள், கட்டிடங்களின் பாகங்கள் தண்ணீர் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டிருந்த துவாரங்களை அடைத்துக்கொண்டதால், தண்ணீர் அதிகமாகி அணையின் முன்பக்கத்தில் விரிசல்கள் விடத்துவங்கியுள்ளதால் மக்கள் பதற்றத்தில் உள்ளார்கள்.