புலம்பெயர்ந்தோரால் ஜேர்மனிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய நன்மை
20ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் ஜேர்மனிக்கு அலையலையாய் புலம்பெயர்வோர் வந்திருக்காவிட்டால், இன்னமும் அதன் மக்கள்தொகை 1950களில் இருந்தது போலவேதான் இருந்திருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
Mediendienst Integration என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், கடந்த 50 ஆண்டுகளாக ஜேர்மனியின் மக்கள்தொகையில் புலம்பெயர்தல் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
வெளிநாட்டவர்கள் ஜேர்மனியில் குடியமர முடிவு செய்யாமலிருந்திருந்தால், ஜேர்மனியின் மக்கள் தொகை 1950க்கும் 70க்கும் இடையில் மட்டுமே அதிகரித்திருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
அதற்குப் பிறகு, குறைவான குழந்தை பிறப்புகள் மற்றும் முதுமையடைதல் ஆகிய காரணங்களால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஜேர்மனியின் மக்கள்தொகை குறைந்துகொண்டே வந்திருக்கும் என்கிறார்கள் அவர்கள்.
ஆனால், தற்போது சுமார் 83 மில்லியன் மக்கள் ஜேர்மனியில் வாழ்கிறார்கள். அவர்களில் கால்வாசிப்பேர் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்கள்! அதாவது அவர்கள் ஒன்றில் முதல் தலைமுறை புலம்பெயர்ந்தோர் அல்லது புலம்பெயர்ந்தோரின் உறவினர்கள்.
ஆனால், கவலைக்குரிய விடயம் என்னவென்றால், மக்கள் தொகை குறைந்துவருகிறது. 2020இல், அதாவது கொரோனா காலகட்டத்தில், ஜேர்மனியில் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 1.8 சதவிகிதம் மட்டுமே அதிகரித்தது. கடந்த 10 ஆண்டுகளில், இதுதான் வெளிநாட்டவர் மக்கள்தொகையில் குறைவான வளர்ச்சி வீதம் என்கிறது பெடரல் அலுவலக புள்ளிவிவரம் ஒன்று.
நிபுணர்களின் கருத்துப்படி, ஆண்டொன்றிற்கு சுமார் 400,000 பணி செய்யும் வயதிலுள்ள புலம்பெயர்வோர் ஜேர்மனிக்கு தேவை. அப்போதுதான் பொறியியல், மருத்துவம் முதலான ஜேர்மனியின் முக்கிய துறைகளில் உள்ள காலியிடங்கள் பூர்த்தியாகும்.
அதனால்தானோ என்னவோ, ஜேர்மனியின் புதிய அரசும் புலம்பெயர்வோருக்கு சாதகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.