கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளுங்கள்: பிரதமர் போரிஸ் ஜான்சன்
பிரித்தானியாவில் ஜூலை 19 முதல் கொரோனா கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட இருக்கும் நிலையில், பிரித்தானியர்கள் கொரோனா வைரஸுடன் வாழ பழக்கிக்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார் பிரதமர் போரிஸ் ஜான்சன்.
இன்று கட்டுப்பாடுகள் நெகிழ்த்தல் தொடர்பில் போரிஸ் ஜான்சன் ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு ஒன்றை நிகழ்த்த உள்ள நிலையில், சுகாதாரத் துறை அமைச்சரான சாஜித் ஜாவித் இதே விடயம் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்ற இருக்கிறார். ஐரோப்பாவைப் பொருத்தவரை, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக பிரித்தானியாவில்தான் அதிக அளவில் மக்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்கள்.
ஆனாலும், பிரித்தானியா மூன்றாவது பொதுமுடக்கத்தை படிப்படியாக நெகிழ்த்தி வருகிறது. என்றாலும், சில கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. இரவு விடுதிகள் திறக்கப்பட அனுமதி இல்லை, பெரிய அளவிலான முழு அளவில் நடைபெற அனுமதி இல்லை, மதுபான விடுதிகளில் இன்னமும் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.
கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, கொரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக்கொண்டால் மேலும் தொற்று தொடர்ந்து அதிகரிக்கத்தான் செய்யும் என்று கூறியுள்ள பிரதமர் அலுவலகம், அதே நேரத்தில் தடுப்பூசிகள் காரணமாக கொரோனா தொற்றுக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கைக்கும் உள்ள தொடர்பு வலுவிழந்துள்ளது என்றும் கூறியுள்ளது.
பிரித்தானியர்களில் சுமார் 64 சதவிகிதத்தினருக்கு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், இன்று மக்கள் மீண்டும் சுதந்திரமாக செயல்படுவது எப்படி என்பது குறித்து அறிவிக்க இருக்கிறோம் என்றார் போரிஸ் ஜான்சன்.
அதே நேரத்தில், கொள்ளைநோய் முடிவுக்கு வந்துவிடவில்லை என்பதை வலியுறுத்தியுள்ள ஜான்சன், மக்கள் கொரோனா வைரஸுடன் வாழ பழகிக்கொள்ளவேண்டும் என்றும், தங்கள் பாதுகாப்பு குறித்து தாங்களே முடிவு செய்துகொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார்.