பாதிரியாரால் கர்ப்பமாகி குழந்தை பெற்ற 15 வயது சிறுமி! தற்போது 20 வயதாகும் நிலையில் அவரையே திருமணம் செய்ய விருப்பம்
கேரளாவில் பாலியல் பலாத்காரம் வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற பாதிரியாரை மணந்து கொள்ள அவரால் பாதிக்கப்பட்ட பெண் விருப்பம் தெரிவித்து நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராபின் வடக்கும் சேரி (40). இவர் அங்குள்ள ஒரு ஆலயத்தில் பாதிரியாராக இருந்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு ஆலய பிரார்த்தனைக்கு வந்த 15 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று அவர் பாலியல் பலாத்காரம் செய்தார்.
அதனால் அந்த சிறுமி கர்ப்பிணியானார். இந்த நிலையில் அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்த தகவல், அக்கம் பக்கத்தினர் மூலம் தெரியவந்தது. பின்னர் மெல்ல, மெல்ல இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. பின்னர் பொலிசார் ராபினை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பாதிரியாருக்கு 20 ஆண்டுகள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.இதை தொடர்ந்து பாதிரியார் கண்ணூர் சென்டிரல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
தண்டனை காலத்தை அங்கு அனுபவித்து வருகிறார். இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாதிரியார் ராபின் திடீரென மனமாற்றம் அடைந்து சிறுமியின் சம்மதத்துடன் தான் பாலியல் உறவில் ஈடுபட்டேன் என்றும், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதால் ஜாமீன் வழங்க வேண்டும் என கூறி இருந்தார்.
அதை ஏற்க மறுத்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதற்கிடையே பாதிக்கப்பட்டவருக்கு, தற்போது 20 வயதானது. இதனை தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், சிறையில் உள்ள பாதிரியார் ராபினை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நானும் எனது குழந்தையும் அவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறோம்.
ஆதலால் ராபினுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.