குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த காதலி? கல்லூரி மாணவன் மரணம்., பொலிஸார் விசாரணை
தமிழக மாவட்டம் கன்னியாகுமரியில் கல்லூரி மாணவனை வீட்டுக்கு அழைத்த காதலி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
மாணவனின் குடும்பத்தார் குடுத்த புகாரின் பேரில், பேருந்தில் அறிமுகமான பெண்ணிடம் பொலிஸார் கடும் விசாரணை நடத்திவருகின்றனர்.
தமிழக - கேரள எல்லை பகுதியான பாறசாலையை சேர்ந்தவர் சாரோன் ராஜ். அவர் நெய்யூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். தினமும் பேருந்தில் கல்லூரிக்கு செல்லும்போது காரக்கோணம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு நெருங்கி பழகிவந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இளம்பெண்ணிற்கு அவரது வீட்டில் வரன் தேட தொடங்கியதாக கூறப்படுகிறது.
கடந்த 17-ஆம் திகதி அப்பெண் சாரோன் ராஜை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். இதனால், தனது நண்பர் ரெஜின் என்பவருடன் அப்பெண்ணின் வீட்டிற்கு சாரோன்ராஜ் சென்றுள்ளார்.
ஆனால், ரெஜினை வெளியே நிற்கவைத்துவிட்டு, சாரோன்ராஜை மட்டும் வீட்டிற்குள் அழைத்து சென்று அவருக்கு குடிக்க குளிர்பானம் கொடுத்துள்ளார். காதலி கொடுத்த குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்தில் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டதாக சாரோன்ராஜ் தனது நண்பரிடம் கூறியுள்ளார்.
பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட சாரோன்ராஜ் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் சந்தேக மரணம் பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், இளம் பெண் கொடுத்த குளிர்பானத்தில் குடித்ததால் தனது மகனுக்கு உயிரிழப்பு ஏற்பட்டதாக சாரோன் ராஜின் தந்தை ஜெயராஜ், பாறசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து இருக்கலாம் என சாரோன் ராஜின் குடும்பத்தினர் குற்றம்சாட்டும் நிலையில், இளம்பெண் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பொலிஸார் தீவிர விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்மல் பகுதி பள்ளியில் கோலா பானத்தில் ஆசிட் கலந்து கொடுத்து பள்ளிச்சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தின் மர்மமே விலகாத நிலையில் கல்லூரி மாணவனுக்கு காதலியே விஷம் வைத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.