பிரபல கிரிக்கெட் வீரருக்கு கொரோனா! மனைவி நினைவாக கிரிக்கெட் போட்டி நடக்கும் சூழலில் பெருந்தொற்று
அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மெக்ராத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் கிளென் மெக்ராத் மனைவி ஜேன் மெக்ராத் கடந்த 2008-இல் மார்பகப் புற்றுநோயால் உயிரிழந்தார்.
அவரது நினைவாக ஆண்டுதோறும் சிட்னி கிரிக்கெட் பிங்க் டெஸ்ட் விளையாடப்படும். இந்த டெஸ்ட் ஆட்டத்தின்மூலம், மெக்ராத் அறக்கட்டளைக்கு நிதி திரட்டப்படும்.
இந்த நிதியானது புற்றுநோயால் வாடுபவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களுக்கு உதவும் செவிலியர்களுக்கும் பயன்படுத்தப்படும். இந்த ஆட்டத்தின் மூன்றாம் நாள் ஆட்டம் ஜேன் மெக்ராத் தினம் என அழைக்கப்படும்.
இங்கிலாந்து, அவுஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் 4-வது டெஸ்ட் ஆட்டம் சிட்னியில் புதன்கிழமை தொடங்குகிறது. இந்த ஆட்டம் பிங்க் டெஸ்ட் ஆட்டமாக நடைபெறுகிறது. இந்த நிலையில், கிளென் மெக்ராத்துக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, இங்கிலாந்து, அவுஸ்திரேலிய வீரர்களுக்கு பிங்க் நிற தொப்பிகளை வழங்கும்போது கிளென் மெக்ராத் காணொலி வாயிலாக பங்கேற்கிறார் என தெரியவந்துள்ளது.