இன்று விருந்தாளி என்கிறார்கள்; நாளை கூட்டாளி ஆவார்கள்! மக்கள் தான் ஏமாளிகள்! சீமான் விளாசல்
அம்மையார் மம்தாவுக்கும், ஐயா பினராயி விஜயனுக்கும் பகையாளியாக இருப்பவர் (மோடி), ஐயா ஸ்டாலினுக்கு மட்டும் விருந்தாளி ஆனதெப்படி? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
2022-ம் ஆண்டு ஜனவரி 12-ம் திகதி விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழா நடைபெறவுள்ளது.
இதில் கலந்துகொண்டு கல்லூரிகளைத் திறந்துவைக்க பிரதமர் மோடி ஜனவரி 12-ம் திகதி விமானம் மூலம் சென்னை வர இருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பிரதமர் மோடி எங்களுக்கு எதிரியே அல்ல, இந்துத்துவா தான் எங்களுக்கு எதிரி.
எனவே தமிழகம் வருகின்ற பிரதமரை நாங்கள் வரவேற்கிறோம். அவர் இப்போது எங்களுக்கு விருந்தாளி, எனவே அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என தெரிவித்தார்.
இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சிக்கு வருமுன் #GoBackModi என்றவர்கள், அதிகாரத்தில் அமர்ந்ததும், ‘பிரதமர் மோடியின் வருகையை நாங்கள் எதிர்க்க மாட்டோம்; அவர் எங்கள் பகையாளி அல்ல; விருந்தாளி’ என்கிறார்கள்.
அம்மையார் மம்தாவுக்கும், ஐயா பினராயி விஜயனுக்கும் பகையாளியாக இருப்பவர், ஐயா ஸ்டாலினுக்கு மட்டும் விருந்தாளி ஆனதெப்படி?
இன்று விருந்தாளி என்கிறார்கள்; நாளை கூட்டாளி ஆவார்கள்! மக்கள் தான் ஏமாளிகள்! - சீமான் விளாசல்https://t.co/h70V8qFnCI#GoBackModi #Seeman #DMK #MKStalin #TamilNadu #Modi #BJP pic.twitter.com/1iIaWNO5Lg
— நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi (@NaamTamilarOrg) December 28, 2021
பகையாளி என்பது விருந்தாளியானது போல, நாளைக்கு விருந்தாளி கூட்டாளியாகவும் மாறி, மக்களை ஏமாளியாக்கிக் கறுப்புக்கொடியைக் கீழே வீசிய கரங்கள், காவிக்கொடியைக் கையிலேந்தும் நாள் வெகுதொலைவில் இல்லை என சீமான் தெரிவித்துள்ளார்.