நான் இவர்களால் கொல்லப்படலாம்; பெரியார் விருதை திருப்பியளிக்கும் அறம் பட இயக்குனர்
அறம் படத்திற்கு வழங்கப்பட்ட பெரியார் விருதை திருப்பியளிப்பதாக இயக்குநர் கோபி நயினார் தெரிவித்துள்ளார்.
கோபி நயினார்
2017 ஆம் ஆண்டு, நயன்தாரா நடிப்பில் வெளியான அறம் படத்தை இயக்கியவர் கோபி நயினார்.
இந்த படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவில் கோபி நயினார் பிரபலமானார். திராவிடர் கழகம் சார்பில், இந்த படத்திற்கு பெரியார் விருது வழங்கப் பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் காட்டூர் பகுதியில் வசித்து வரும் இவர், அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு எதிரான மக்கள் போராட்டம், பழவேற்காடு பகுதியில் குவாரி அமைப்பதற்காக நிலம் தோண்டும் பணிக்கு எதிரான போராட்டம் ஆகியற்றில் கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார்.
சமீபத்தில் திமுக அரசுக்கு எதிராக கோபி நயினார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதற்கு திமுகவினருக்கு எதிர்வினையாற்றினார்கள்.
இந்நிலையில், தனது படத்திற்கு வழங்கப்பட்ட பெரியார் விருதை திருப்பியளிப்பதாக கோபி நயினார் தெரிவித்துள்ளார்.
நான் எதிர்காலத்தில் கொல்லப்படலாம்
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தலித் மக்களுக்கு குடிமனை கேட்டும் அவர்களின் வாழ்நிலங்களில் மண் அள்ளுவதை தடுக்க கோரியும் போராடியதற்காக பெரியாரிய சிந்தனையாளர்களால் நான் மிகவும் கேவலமாக பொதுவெளியில் இழிவுபடுத்தப்படுகிறேன்.
தன்னை ஜனநாயக அமைப்பு என்று கூறிக்கொள்கின்ற ஒரு அமைப்பை எதிர்த்து ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பினால் சர்வாதிகார மனநிலையோடு அது என்னை எதிர்கொள்கிறது. இத்தகைய சூழலில் இந்த சர்வாதிகார மனநிலை கொண்டவர்களின் மத்தியில் வாழ்வதற்கே எனக்கு அச்சமூட்டுகிறது.
தமிழகம் முழுவதும் தலித் மக்களின் நிலை இது தான் என்று நம்புகிறேன். தமிழ்நாட்டில் ஒரு தலித் ஒரு ஜனநாயக சிந்தனையோடு அரசியல் கேள்விகளை எழுப்புவது பெரியாரிய சிந்தனையாளர்களுக்கு திராவிட சிந்தாந்தவாதிகளுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு சர்வாதிகார போக்கின் மனநிலை.
இந்த சூழலில் இன்று கடுமையாக அவமதிக்கப்படுகிற நான் எதிர்காலத்தில் இவர்களால் கொல்லப்படவும் நேரிடலாம். இந்தியா முழுக்க நடக்கின்ற அறிவுஜீவிகளின் சமூக செயற்பாடட்டாளர்கள் கலைஞர்கள் மீது நடந்த படுகொலைக்கும் எதிர்காலத்தில் எனக்கு நிகழ போகும் படுகொலைக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்
நான் அறம் என்கிற திரைப்படத்தை இயக்கினேன். அத்திரைப்படத்தை கருத்து என்னவென்றால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு துயரமென்றால் இந்த அரசு எதுவும் செய்யாது என்பதே. அதற்காக தான் திராவிடர் கழகம் என்னை பாராட்டி தந்தை பெரியார் விருது வழங்கியது.
என்றும் பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ் போராட்ட உணர்வோடு pic.twitter.com/nU8CnA80Bn
— Gopi Nainar (@GopiNainar) March 20, 2025
நிகழ்காலத்தில் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் போராட்டங்களை முன்னெடுக்கும் போது இந்த செயல் என்னை அவமானப்படுத்துகிறது. அறம் என்ற கதைக்கு விருது வழங்கி கொண்டாடிய திராவிடர் கழகம் நிஜ வாழ்வில் நடைமுறைப்படுத்தும் போது என்னை இந்த சமூகத்தின் எதிரியாக சித்திரிக்கிறது.
இது போன்ற காரணுங்களுக்காக அறம் திரைப்படத்திற்காக திராவிடர் கழகம் எனக்கு வழங்கிய பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன். என்றும் பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ் போராட்ட உணர்வோடு" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |