தண்டவாளத்தில் கிடந்த தலை! தமிழகத்தை உலுக்கிய கோகுல்ராஜ் ஆணவக்கொலை... சுவாதி பரபரப்பு வாக்குமூலம்
தமிழகத்தை உலுக்கிய கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் சுவாதி பிறழ்சாட்சியாக மாறி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோகுல்ராஜ் கொலை
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். இவர் தன்னுடன் படித்த நாமக்கலை சேர்ந்து வேறு சமூக பெண்ணை காதலித்துள்ளார்.
இருவரும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் 23.6.2015-ல் பேசிக் கொண்டிருந்தனர். அதன் பிறகு கோகுல்ராஜ் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு, உடல் வேறாக கோகுல்ராஜ் உடல் கண்டெடுக்கப்பட்டது.
வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததால் கோகுல்ராஜ் ஆணவக் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இவ்வழக்கில் கோகுல்ராஜுடன் படித்த சுவாதி என்ற பெண் முதலில் முக்கிய சாட்சியாக இருந்துள்ளார்.
பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி
ஆனால் பின்னர் பிறழ்சாட்சியாக மாறினார். இந்த கொலை வழக்கின் முக்கிய சாட்சி பிறழ் சாட்சியாக மாறியது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அந்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தனர். இதனை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுவாதி இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தற்போது விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. விசாரணையின் போது சாட்சி கூண்டில் சுவாதி நிறுத்தப்பட்டிருந்தார். அதற்கு அருகே வைக்கப்பட்டிருந்த டிவியில் 23.6.2015ம் தேதி நடைபெற்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி திரையிடப்பட்டது. அந்த திரையில் கோகுல் ராஜும் சுவாதியும் கோவிலில் இருந்து உள்ளே வருவது, வெளியே வருவது மற்றும் அவர்கள் பேசிக்கொண்டிருக்கக்கூடிய காட்சிகள் திரையிடப்பட்டது.
வாக்குமூலம் பதிவு
அப்போது சுவாதியிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். அதற்கு அழுதபடியே அந்த படத்தில் தெரிவது நான் இல்லை என சுவாதி கூறினார். இவ்வளவு பெரிய திரையில் உங்கள் படம் தெளிவாக தெரிகிறது. ஆனால் நீங்கள் இல்லை என்று சொக்கிறீர்கள், உங்களையே உங்களுக்கு தெரியவில்லையா? என்று கேள்வி எழுப்பினார்கள் நீதிபதிகள்.
தொடர்ந்து சுவாதி மறுப்பு தெரிவித்து வருகிறார். அவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.