படிப்பில் தங்கப்பதக்கம் வென்றும் அரசு வேலை கிடைக்கவில்லை - விபரீத முடிவெடுத்த இளைஞர்
பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் வென்றும் அரசுவேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
படிப்பில் தங்கப்பதக்கம்
உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரின் குஜைனி பகுதியில் வசித்து வந்தவர் 23 வயது பொறியியல் பட்டதாரியான ஆனந்த் குமார்.
2024 ஆம் ஆண்டு கான்பூரில் உள்ள பிரான்வீர் சிங் தொழில்நுட்பக் கல்லூரி (PSIT) என்ற தனியார் பொறியியல் கல்லூரியில் பிடெக் (மின் பொறியியல்) படிப்பில் முதலிடம் பிடித்ததுடன், மாநில அளவில் மூன்றாவது இடத்தையும் பெற்றிருந்தார்.

இதற்காக உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேலிடம் தங்கப் பதக்கம் பெற்றார்.
இதனையடுத்து அரசுவேலைக்கு முயற்சித்த அவர், வேலை கிடைக்காத விரக்தியில் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
ஆனந்த் குமாரின் குடும்பத்தினர் அவருடைய மூத்த சகோதரரின் திருமணத்தை உறுதி செய்வதற்காக பீகாரில் உள்ள தங்களது சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கடிதம்
இந்த நேரத்தில், ஆனந்த் குமார் கான்பூரின் குஜைனி பகுதியில் உள்ள தங்களது 3 மாடி வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
கதவைத் திரும்பத் திரும்பத் தட்டியும் பதில் வராததால், வீட்டுப் பணிப்பெண் அக்கம்பக்கத்தினருக்கும் காவல்துறைக்கும் தகவல் அளித்ததை அடுத்து, காவல்துறையினர் கதவை உடைத்து சடலத்தை மீட்டுள்ளனர்.
அறையில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், "மன்னித்துவிடுங்கள் அப்பா, நான் அரசு வேலை பெறுவதற்காக கிட்டத்தட்ட 50 முறை முயற்சி செய்தும் என்னால் வெற்றி பெற முடியவில்லை. தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பேசிய சிவில் இன்ஜினியரிங் மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனத்தின் ஓய்வுபெற்ற ஊழியரான ஆனந்த் குமாரின் தந்தை ராஜ்குமார், "போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு முன்பு, பட்டப்படிப்புக்குப் பின் பவர் கிரிட் நிறுவனத்தில் ஓராண்டு தொழிற்பயிற்சியை முடித்திருந்தார்.
ரயில்வே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC), வங்கிகள் மற்றும் கல்வித் துறை நடத்திய ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் அவர் கலந்துகொண்டும் வெற்றி பெற முடியவில்லை. கடந்த பல மாதங்களாக அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்து வந்தார்," என்று தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |