இந்த இந்திய வம்சாவளி நபரை தக்கவைக்க ரூ 900 கோடி ஊதியமாக வழங்கிய கூகிள்
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்திய வம்சாவளி நபர் ஒருவர் தற்போதைய எக்ஸ் நிறுவனத்தில் சேருவதைத் தடுக்க கூகிள் அவருக்கு 100 மில்லியன் டொலர்களை ஊதியமாக வழங்கியது.
ட்விட்டரில் சேர்வதைத் தடுக்க
அந்த நபர் யூடியூப் தலைமை நிர்வாக அதிகாரி நீல் மோகன் என்பதை Zerodha இணை நிறுவனர் நிகில் காமத் தற்போது வெளிப்படுத்தியுள்ளார். 2011 ஆம் ஆண்டில், கூகிளின் விளம்பரம் மற்றும் யூடியூப் தயாரிப்பு உத்தியில் நீல் மோகன் ஒரு முக்கிய பங்காளியாக இருந்தார்.
வெளியான தகவல்களின் அடிப்படையில், கூகிளின் அந்த வாய்ப்பு என்பது பல ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் வரையறுக்கப்பட்ட பங்குகளாகும். மோகன் ட்விட்டரில் சேர்வதைத் தடுக்க கூகிள் நிறுவனம் எடுத்த தீவிர முயற்சியின் ஒரு பகுதியாக இது இருந்தது.
மோகனின் முன்னாள் உயரதிகாரி டேவிட் ரோசன்ப்ளாட் அப்போது ட்விட்டர் நிறுவனத்தில் சேர்ந்திருந்தார். இதனால் மோகனையும் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரியாக நியமிக்க ஆர்வமாக இருந்தார்.
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் பட்டம் பெற்ற நீல் மோகன், ஆண்டர்சன் கன்சல்டிங்கில் (தற்போது ஆக்சென்ச்சர்) தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார்.
பின்னர் NetGravity நிறுவனத்தில் இணைந்தார். இந்த நிறுவனம் DoubleClick என்ற நிறுவனத்தால் கைப்பற்றப்பட்டது. இங்கே மோகன் பல பதவிகள் பெற்று இறுதியில் வணிக நடவடிக்கைகளின் துணைத் தலைவரானார்.
தங்கள் பக்கம் இழுக்க
2007ல் கூகிள் நிறுவனம் 3.1 பில்லியன் டொலருக்கு DoubleClick நிறுவனத்தைக் கைப்பற்ற, மோகன் கூகிள் நிறுவன விளம்பரப் பிரிவின் முதன்மை பொறுப்புக்கு வந்தார்.
அவரது மதிப்பை உணர்ந்து, கூகிள் அவரைத் தக்க வைத்துக் கொள்ள 100 மில்லியன் டொலர், இந்திய மதிப்பில் சுமார் ரூ 900 கோடி ஊதியம் வழங்கியது, இது நீண்ட காலத்திற்கு பலனளித்தது.
நீல் மோகன் மட்டுமின்றி, இதே காலகட்டத்தில் சுந்தர் பிச்சையை தங்கள் பக்கம் இழுக்க ட்விட்டர் முயன்றது. சுந்தர் பிச்சைக்கு 50 மில்லியன் டொலர் மதிப்பிலான பங்குகளை அளித்து அவரையும் கூகிள் தக்கவைத்துக் கொண்டது.
நீல் மோகன் தற்போது யூடியூப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றுகிறார். சுந்தர் பிச்சை 2015 இல் கூகிளின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆனார், பின்னர் 2019 இல் ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |