எலோன் மஸ்க் நிறுவனத்தில் அன்று செய்த முதலீடு... 100 பில்லியன் டொலரை அள்ளப்போகும் நிறுவனம்
கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் முந்தைய முதலீடு ஒன்றால் பெரிய ஆதாயம் ஒன்றை அடையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வளர்ச்சி கட்டத்தில்
ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் அன்று செய்த முதலீடு தற்போது 100 பில்லியன் அமெரிக்க டொலர் என்ற மாபெரும் ஆதாயமாக மாற வாய்ப்புள்ளது.

அதாவது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஒரு சாத்தியமான ஐபிஓ-விற்குத் தயாராகி வரும் வேளையில் இத்தகவல் வெளியாகியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, எலோன் மஸ்க்கின் நிறுவனம் வளர்ச்சி கட்டத்தில் இருந்தபோதே ஆல்பபெட் நிறுவனம் அதில் முதலீடு செய்திருந்தது.
இருப்பினும், 2025 ஆம் ஆண்டின் இறுதியில், கூகுள் அந்த நிறுவனத்தில் கிட்டத்தட்ட 6.11 சதவீதப் பங்குகளை வைத்திருந்தது. சிக்கல் என்னவென்றால், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் எக்ஸ்ஏஐ இணைந்ததிலிருந்து ஆல்பபெட் நிறுவனத்தின் பங்கு தற்போது 6.11 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைந்துள்ளது.
எலோன் மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், பொதுப் பங்கு வெளியீட்டிற்குத் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், அந்நிறுவனம் 2 டிரில்லியன் அமெரிக்க டொலர் என்ற மிகப்பெரிய சந்தை மதிப்பை இலக்காகக் கொண்டுள்ளது.
இது நடந்தால், கூகிளின் கிட்டத்தட்ட 5 சதவீதப் பங்கின் மதிப்பு 100 பில்லியன் அமெரிக்க டொலராக இருக்கலாம். எலோன் மஸ்க் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் கிட்டத்தட்ட 40 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார்.

அபரிமிதமாக வளர்ந்துள்ளது
திட்டமிட்டபடி ஐபிஓ நடந்தால், அவரது சொத்து மதிப்பு ராக்கெட் வேகத்தில் உயரக்கூடும். மட்டுமின்றி, அவர் உலகின் முதல் டிரில்லியனராக மாறக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிவரும் தகவலின் அடிப்படையில், மஸ்க் மட்டுமல்லாமல், பல முதலீட்டாளர்களும் மூத்த நிர்வாகிகளும் பெரும் ஆதாயங்களைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் 2002 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, அன்று முதல் அது அபரிமிதமாக வளர்ந்துள்ளது. மேலும், இந்த ஆண்டு கிட்டத்தட்ட 20 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் ஈட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள் 2015-ல் ஸ்பேஸ்எக்ஸில் தனது முதல் முதலீட்டைச் செய்தது. அந்நிறுவனத்தின் மதிப்பு 10 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தபோது, ஃபிடிலிட்டியுடன் இணைந்து இந்த முதலீடு செய்யப்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |